Wednesday, May 12, 2010

மனிதகரங்கள் படிந்த பைபிள்

                                      இதுதான் பைபிள்



                                      பைபிள் ஓர் அறிமுகம் 
பைபிள் எனும் நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும்.  ஒரு பகுதி பழைய ஏற்பாடு எனவும் இன்னொரு பகுதி புதிய ஏற்பாடு எனவும் வகைப் படுத்தப்பட்டுள்ளது. கிறித்த நம்பிக்ககைப் படி பழைய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு முன்வாழ்ந்த தீர்க்க தர்சிகளுடைய வேதங்களின் தொகுப்பாகும். அதாவது பழைய ஏற்பாடு என்பது பல வேதங்களின் தொகுப்பு எனலாம்.

உதாரணாக பழைய ஏற்பாட்டில் 39 அல்லது 45 ஆகமங்கள் உள்ளன.

இதில் முதல் 5 ஆகமங்கள் மோசே எனும் தீர்க்க தர்சியின் வேதமாகும்.


6வது ஆகமம் யோசுவாவின் புஸ்தகம் என்பதாகும்.


இது யோசுவா அவர்களின் வேதம். முதலாம் சாமுவேல் இரண்டாம் சாமுவேல் என்று இரண்டு ஆகமங்கள் உள்ளன.


இது சாமுவேல் எனும் தீர்க்கதரிசியின் வேதமாகும். யோபு என்றொரு ஆகமம்.


இது யோபு அவர்களின் வேதம்.

இப்படிப் பல தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப்பட்ட பல வேதங்களின் தொகுப்பே கிறித்தவ நம்பிக்கையின் படி பழைய ஏற்பாடு ஆகும்.

 புதிய ஏற்பாடு ஏசுவுக்குப் பிறகு வந்தவர்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு எழுதியவையாகும்.  இப்படிப் பலர்எழுதியவைகளின் தொகுப்பே புதிய ஏற்பாடு. உதாரணமாக மத்தேயு என்றொரு சுவிசேஷம். இது மத்தேயு என்பவரால் எழுதப்பட்டது. மாற்கு என்ற சுவிசேஷம் மாற்கு என்பவரால் எழுதப்பட்டது.

சுருங்கச் சொல்வதனால் பழைய ஏற்பாடை கி.மு என்றும் புதிய ஏற்பாடை கி.பி என்றும் கூறலாம். ஏசுவுக்கு முன்னர் எழுதப்பட்டவைகளையும், ஏசுவுக்குப் பின்னர் எழுதப் பட்டவைகளையும் பாதுகாத்து வைத்திருப்பதாகக் கூறும் கிறித்தவ உலகம் ஏசு எழுதியதையும் ஏசுவுக்கு கர்த்தரிடமிருந்து வந்ததையும் மட்டும் ஏன் பாதுகாக்கவில்லை என்பது கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.

புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும் கடவுளின் ஏற்பாட்டின் படி பரிசுத்த ஆவியின் தூண்டுதலினால் எழுதப்பட்டதாக நீங்கள் நம்புவது சரி தானா? என்பதை ஆராய வேண்டாமா நண்பர்களே!

ஒரு நூலை இறை வேதம் என்று நம்புவதற்கென்று சில தகுதிகள் உள்ளன. சாதாரண மனிதனால் எழுதப்பட்;ட நூல்களில் காணப்படும் குறைபாடுகள் இறை வேதம் எனக் கருதப்படும் நூலில் இருக்குமானால் அதை இறை வேதம் என்று கூற முடியாது. பைபிளை ஆராயும் பொழுது சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களில் காணப்படும் குறைகளை விட அதிக அளவு குறைகளைக் காண்கிறோம். நடுநிலையான சிந்தனையுடன் நீங்கள் ஆராயந்தால் இதை மறுக்க மாட்டீர்கள்.

 பைபிளை இறை வேதம் என்று ஏற்கத் தடையாகவுள்ள குறைபாடுகளை இப்போது ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை.
 'இது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது” என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழி பெயர்ப்புக்கள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும். இது முக்கியமான தகுதியாகும்.

 மூல மொழியில் ஒரு நூல் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அதன் மொழிபெயர்ப்புக்கள் வித்தியாசப்படுவதை நாம் சகஜமாகக் காண்கிறோம். மூல மொழியில் உள்ள நூலே இல்லை எனும் போது ஏற்படும் விளைவுகளைச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக மனிதர்கள் எழுதும் நூல்களே மூல மொழியுடன் இருக்க வேண்டும் எனும் போது கடவுளின் வேதம் என்று நம்பப்படும் நூல் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியம் அல்லவா? இதை என்றேனும் சிந்தித்திருக்கிறீர்களா?

 இந்த விஷயத்தில் வேதங்களுக்கும் ஏனைய நூல்களுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனிடமிருந்து வந்ததாக ஒரு நூலைப் பற்றி மக்கள் நம்பினால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க அதிக முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

திருக்குர்ஆனை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த 14 நூற்றாண்டுகளாகக் குர்ஆனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி,  மூலமொழியில் அப்படியே முஸ்லிம்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த முதலாவது தகுதி பைபிளுக்கு இருக்கிறதா? இல்லை. இல்லவே இல்லை! உலகில் எங்கேயும் பைபிள் மூலமொழியுடன் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. மொழி பெயர்ப்புக்களே உள்ளன. அதை விட பரிதாபமான நிலைமை என்னவென்றால் பைபிளின் மூலமொழி எதுவென்பதில் கூட கிறித்தவ மதகுருமார்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவது தான்.

வேதத்தின் மூல மொழி எதுவென்பதைக் கூட தெரியாமலிருப்பதை விட பரிதாபம் வேறு என்ன இருக்க முடியும்? இதை நாம் சுயமாகக் கூறவில்லை. கிறித்தவ மதகுருமார்களின் கூற்றின் அடிப்படையிலேயேபைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை என்றும் அதன் மூலமொழி எதுவென்று தெரியாதென்றும் கூறுகிறோம்.

பைபிளின் மூலமொழி எது?

இது பற்றி கிறித்தவ உலகம் தருகின்ற வாக்குமூலங்களைப் பார்ப்போம்.

பெங்களூரில் உள்ள இந்திய வேதாகமச் சங்கம் தமிழில் ஒரு பைபிளை வெளியிட்டுள்ளது. இந்தச் சங்கம் புரோட்டஸ்டண்டு எனும் கிறித்தவப் பிரிவைச் சார்ந்தது. இந்த பைபிளின் முதல் பக்கத்தில், 'எபிரேயு, கிரேக்கு எனும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் பழைய ஏற்பாடு எபிரேயு (ஹீப்ரு) மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் ஆரம்பத்தில் அருளப்பட்டதாகவும் அந்த மூலம் தங்களிடம் உள்ளதாகவும் அந்த மூலத்தை வைத்தே தமிழில் மொழி மாற்றம் செய்ததாகவும் உலகுக்குச் சொல்கிறார்கள். இந்த அர்த்தத்திலேயே மேற்கண்ட வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு தானா? புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழி தானா? என்பதை நாம் ஆராய்வதற்கு முன்னால் இந்திய வேதாகமச் சங்கம் உங்களை ஏமாற்றுவதை அடையாளம் காட்டுவது அவசியமாகின்றது.

ஒரு வாதத்துக்காக இவர்களின் கூற்றில் நம்பிக்கை வைத்து, பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்றே வைத்துக் கொள்வோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கேட்கிறோம்: எபிரேயு மொழியில் பைபிள் உலகில் இருக்கின்றதா? இருக்கிறது என்றால் எங்கே இருக்கின்றது? எபிரேயு மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமானால் எபிரேயு மொழியும் தமிழ் மொழியும் தெரிந்த தான் மொழி பெயர்க்க முடியும். அந்த எபிரேயு மொழி வல்லுனர்யார்? இந்தக் கேள்விக்கு கிறித்தவ உலகில் விடை கிடைக்காது.

உலகில் எபிரேயு மொழி செத்துப் போய் பல நூறு ஆண்டுகளாகி விட்டன. வழக்கொழிந்து போய்விட்ட --உலகில் எவருக்குமே தெரியாத-- எபிரேயு மொழியிருந்து தான் இந்த பைபிள் மொழி மாற்றம் செய்யப்பட்டது என்று கூறுவது அப்பட்டமான மோசடியாகும்..

 இஸ்ரேலில் இப்போது இந்த மொழி பயிற்றுவிக்கப்படுகின்றதே என்று கிறித்தவ உலகம் சமாளிக்கலாம். புதிதாக ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டு இன்று அதற்கு எபிரேயு என்று பெயரிட்டுள்ளார்களே தவிர அது எபிரேயு மொழி அன்று. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உலகை விட்டு முற்றிலுமாக விடைபெற்று விட்ட அம்மொழி இனி ஒருக்காலும் திரும்பி வர முடியாது.

இது கற்பனையோ, வெறும் அனுமானமோ இல்லை. அதே கிறித்தவ உலகம் தந்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறுகிறோம்.

 கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த, திண்டிவனம் தமிழ் நாடு விவிலிய மறைக் கல்வி வழிபாட்டு நிலையத்தினர்ஒரு பைபிளைத் தமிழில் வெளியிட்டுள்ளனர். 6.4.1980-ல் வெளியிடப்பட்ட பரிசுத்த வேதாகமம் என்ற இந்த பைபிளின் முன்னுரையில்,
'
நம் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய துணை புரியும் வகையில் திருச்சி தமிழ் இலக்கியக் கழகம் 1960-ல் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இணைந்த ஒரு நூலாக 'வுல்காத்தா” எனும் இலத்தீன் மொழிபெயர்ப்பைத் தழுவி பரிசுத்த வேதாகமத்தை முதன் முறையாக தமிழ் மொழியில் வெளியிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறித்தவ நண்பர்களே! நன்றாகக் கவனியுங்கள். இலத்தீன் மொழி பெயர்ப்பைத் தழுவியே பைபிள் தமிழ்ப்படுத்தப்பட்டதாகத் தமிழ் பைபிளின் முன்னுரை கூறுகிறது.

எபிரேயு எனும் மூலமொழி உலகில் இருந்திருந்தால் -அந்த மூலமொழியில் பைபிள் பாதுகாக்கப்பட்டிருந்தால்- இலத்தீன் மொழி பெயர்ப்பை எவரும் தழுவுவார்களா? மூலமொழி உலகில் இல்லாத காரணத்தினால் தான் ஒரு மொழிபெயர்ப்பைத் தழுவி எழுத வேண்டிய அவசியம் அவர்களுக்கு நேரிட்டது என்பதில் உங்களுக்கு ஐயமுண்டா?

 நண்பர்களே! மற்றொரு விஷயத்தைக் கவனியுங்கள்.

மூலமொழியில் பைபிள் பாதுகாக்கப்பட்டிருக்குமானால் அது கத்தோலிக்கப் பிரிவினரிடம் இருப்பதற்குத் தான் அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் புரோட்டஸ்டண்டு பிரிவை விட காலத்தால் முந்தியதும் ஆதியானதும் கத்தோலிக்கப் பிரிவே. மூலமொழி வேதத்தின் ஒரு பிரதியாவது அவர்களிடம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதையும் அவர்களிடம் இல்லையென்றால் உலகில் எவர்களிடமும் குறிப்பாகப் புரோட்டஸ்டண்டு களிடம் இருக்கவே முடியாது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். எனவே மூலமொழி வேதம் இல்லை என்பதே தெளிவு.

கத்தோலிக்க உலகம் இந்த உண்மையை ஒப்புக் கொள்கிறது. புரோட்டஸ்டண்டுகள் எபிரேயு மூலமொழியில் பைபிள் உலகில் இருக்கின்றது என்ற பொய்யான கருத்தை மெய்ப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்றும் புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்கு என்றும் புரோட்டஸ்டண்டுகள் கூறுகின்றனர். இந்தக் கூற்றிலாவது உண்மை இருக்கின்றதா என்றால் அதுவுமில்லை. புரோட்டஸ்டண்டுகளின் இந்திய வேதாகமச் சங்கம் வெளியிட்ட பைபிளில் புதிய ஏற்பாட்டின் துவக்கத்தில்,

நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு இது 'மூல பாஷையாகிய கிரேக்கு”க்கு இசையத் திருத்திய மொழிபெயர்ப்பு(1954) எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 புதிய ஏற்பாடு என்பது முதன் முதலில் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டதாகவும், அதிலிருந்து தான் பல மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் உலகை நம்ப வைப்பதற்காகத் திட்டமிட்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கூற்றாவது உண்மையா? 'இல்லை” என்று தனக்குத் தானே மறுத்துக் கொள்கிறது கிறித்தவ உலகம்.

புதிய ஏற்பாட்டின் முதலாவது சுவிஷேசம் 'மத்தேயு” என்பது. கத்தோலிக்கர்கள் திண்டிவனத்திலிருந்து வெளியிட்ட பைபிளில் மத்தேயு சுவிஷேசத்தின் முன்னுரையில்,

 'ஆகையால் அக்காலத்தில் பாலஸ்தீன நாட்டில் வழக்கிலிருந்த 'அரமாயிக்” மொழியில் எழுதினார். அவர்சுவிஷேசத்தை கி.பி 50ஆம் ஆண்டுக்குள் எழுதியிருக்க வேண்டும். 70ஆம் ஆண்டுக்குப் பின் இது கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சுவிஷேசம் எழுதப்பட்ட காலத்தில் பாலஸ்தீன நாட்டில் அரமாயிக் மொழி தான் வழக்கத்தில் இருந்தது. அந்த மொழியில் தான் சுவிஷேசங்கள் எழுதப்பட்டன. அதன் பிறகு கிரேக்க மொழியில் பெயர்த்தெழுதப்பட்டது என்று கத்தோலிக்கர்கள் தெளிவான வாக்கு மூலம் தருகின்றனர்.

கிரேக்க பைபிள்-புதிய ஏற்பாடு --ஒரு மொழி பெயர்ப்புத் தானே தவிர மூலமொழி நூல் அன்று. புதிய ஏற்பாட்டின் மூலமொழியாக இருந்த அரமாயிக் மொழியில் புதிய ஏற்பர்டு உலகில் இருக்கின்றதா? அந்த மொழி அறிந்தவர்கள் இருக்கின்றார்களா? நிச்சயமாக இல்லை.

புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்க மொழியில்லை என்தபற்கும் அரமாயிக் எனும் மூலமொழியில் உலகில் எங்கேயும் பைபிள் கிடையாது என்பதற்கும் இதை விட வேறு சான்று தேவை இல்லை.

மூலமொழியாக நம்பப்படும் எபிரேயு மொழியில் பழைய ஏற்பாடு உலகில் கிடையாது என்பது ஒரு புறமிருக்க, அதன் மூலமொழி எபிரேயு தானா? என்பதும் சந்தேகத்திற்குரியதே.

ஏனெனில் பழைய ஏற்பாடு என்பது மோசே, தானியேல், எசக்கியேல், யோபு போன்ற பல தீர்க்கதரிசிகளுக்கு அருளப்பட்டவற்றின் தொகுப்பு என்பதை முன்னரே நாம் கண்டோம். வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காலகட்டங்களிலும் வெவ்வேறு தீர்க்கதரிசிகளுக்கு அருளப்பட்டவை அனைத்தும் எபிரேயு எனும் ஒரே மொழியில் அருளப்பட்டிருக்க வழியில்லை.

ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழி பேசி இருக்கலாம். அவரவர்மொழியில் அவரவர்வேதங்கள் அருளப்பட்டிருக்கலாம். பல்வேறு மொழிகளில் அருளப்பட்டவை பின்னர்எபிரேயு மொழியில் பெயர்த்தெழுதப்பட்டு பின்னர் அதுவும் மறைக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இதில் எழுகிறது.

இந்த எண்ணம் தவறு என்றே வைத்துக் கொண்டாலும், பழைய ஏற்பாட்டின் மூலமொழி எபிரேயு என்பதை ஒப்புக் கொண்டாலும் எபிரேயு மொழியில் பைபிளில் பழைய ஏற்பாடு கிடையாது என்பதில் ஐயமில்லை. அது போல் புதிய ஏற்பாடும் அதன் மூலமொழியாகிய அரமாயிக் மொழியில் கிடையாது. கிறிஸ்தவ உலகில் பைபிளில் மூலநூல் நிலையில் கிரேக்க மொழி பெயர்ப்பே இருக்கின்றது.

இப்போது உங்கள் முன்னுள்ள கேள்வி,  இரண்டு ஏற்பாடுகளும் ஏன் மூல மொழியில் பாதுகாக்கப்படவில்லை என்பதே!

 மூலமொழி நூல் தவறலாமா?
 எத்தனையோ மொழிகள் உலகில் தோன்றி மறைந்துள்ளன! அது போல பைபிளின் மூலமொழியும் மறைந்திருக்கலாம் என்று சில பேர்காரணம் கூறுவர். இது ஏற்க முடியாத காரணமாகும். வழக்கொழிந்து விட்ட மற்ற மொழிகளுடன் அரமாயிக், எபிரேயு மொழிகளை ஒப்பிட முடியாது. இதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

 ஒரு நூலை இறை வேதம் என்று மக்கள் நம்பினால் அதற்கு அதிகளவு முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாக்கவும் அந்த மொழியை வளர்க்கவும் பெரும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆயிரம் மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டாலும் மூலத்தை அவ்வளவு எளிதில் விட்டு விடமாட்டார்கள். மக்களின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.

இந்த மனித இயல்புக்கு மாற்றமாக, பைபிளை இறை வேதம் என்று நம்புகின்ற ஒரு பெரும் சமுதாயம் மூலமொழி நூலை எப்படித் தொலைத்திருக்க முடியும்? இது சிந்திக்க வேண்டிய கேள்வியாகும்.

அடுத்ததாக, வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எந்தச் சமுதாயத்தினரும் தங்கள் மொழியைக் காப்பதில் அதிக சிரத்தை மேற்கொள்வார்கள். உலகில் மாபெரும் நிலப்பரப்பபை நீண்ட நெடுங்காலம் ஆட்சி புரிந்து, உலக வரலாற்றில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இஸ்ரவேலர்கள் தங்களின் மூலமொழியை எப்படி கை கழுவினார்கள்? இதுவும் விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்.

 மக்களின் இந்த இயல்பைப் புரிந்து கொள்ள ஹிந்து மதத்தினரை உதாரணமாக நாம் கொள்வோம்.

பைபிளை விட மிகவும் பழமையான வேதத்திற்குச் சொந்தக்காரர்கள் ஹிந்துக்கள். வேதம் என்று நம்புகின்ற நூல்கள், அவர்கள் மூலமொழி என்று நம்புகின்ற சமஸ்கிருத மொழியில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டுள்ளன. பேச்சு வழக்கில் அம்மொழி செத்து விட்டாலும் அதை அறிந்திருப்பவர்களை இன்றளவும் நாம் காணலாம். காலம் சென்ற இராஜாஜி, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற துக்ளக் 'சோ” ராமசாமி ஆகியோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இன்னும் ஏராளமான பிராமனர்கள் தங்கள் வேதத்தை அதன் மூலமொழியகிய சமஸ்கிருதத்திலேயே அறியக் கூடியவர்களாக உள்ளனர். சமஸ்கிருதக் கல்லூரிகளும் கூட அம்மதத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன.

வேதத்துக்கு சொந்தக்காரர்களும் வரலாற்றுப் பாரம்பர்யம் உடையவர்களும் எளிதில் தங்கள் மொழியை விட்டு விடமாட்டார்கள் என்பதற்கு இது மறுக்க முடியாத ஆதாரமாகும்.

இந்த நிலையில் பைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படாமல் போனதைத் தற்செயலானது என்று நம்ப முடிவில்லை. அன்றாடம் மக்களால் படித்துப் பாதுகாக்கப்படுகின்ற வேதம் அதன் மூலமொழியில் பாகாக்கப்படாமல் போனது இயற்கையான விபத்து என்றும் நம்ப முடியவில்லை.

அந்த மொழியின் காவலர்களாக விளங்கிய மதகுருமார்களே திட்டமிட்டு இந்த நிலையை உருவாக்கி இருக்க வேண்டும். அவர்களைத் தவிர மற்றவர்களால் இத்தகைய வரலாற்றுச் சிறப்புப் பெற்ற மொழியை ஒழித்திருக்க முடியாது.

பைபிள் அதன் மூலமொழியில் இருக்கும் நிலையில் அந்த மூலமொழியை அறிந்த மக்களும் இருப்பார்களானால் தங்கள் சொந்தச் சரக்கைச் சேர்க்க முடியாது என்று கருதிய மதத் தலைவர்கள் திட்டமிட்டே அம்மொழியையும், மூல நூலையும் ஒழித்துக் கட்டி விட்டனர்என்பதே உண்மை.

 இதை ஆதாரமற்ற அனுமானம் என்று எவரும் கருதிவிட வேண்டாம். கிறிஸ்தவ அறிஞர்கள் இந்த வேதத்தில் சேர்த்தவை, நீக்கியவை, மாற்றியவை, மறைத்தவை, ஏராளம்! அவற்றைப் பிறகு தக்க சான்றுகளுடன் உங்களுக்கு விளக்குவோம்.

ஆகையால், வேதம் அதன் மூலமொழியில் பாதுகாக்கபடாமல் போனதைச் சாதாரணமான விஷயமாகக் கருதிவிடக் கூடாது. இறை வேதம் என்ற நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்யும் மிகப் பெரிய விஷயமாகவே இதை நீங்கள் கருத வேண்டும்.

மூலமொழியில் உள்ள பைபிள் தொலைந்து போனது தற்செயலான ஒன்று தான் என்று இதற்குப் பிறகும் எவராவது நம்பினால் அப்போதும் கூட மதகுருமார்கள் மீதுள்ள சந்தேகம் வேண்டுமானால் நீங்கலாமே தவிர, பைபிளின் மீதுள்ள சந்தேகம் நீங்கிவிடப் போவதில்லை.

 மூலத்திலிருந்து மொழிமாற்றம் செய்தவர்சில இடங்களில் தவறாக மொழி மாற்றம் செய்திருக்கலாம்; சில வார்த்தைகளை அவர்விட்டிருக்கலாம். வேண்டுமென்று இப்படிச் செய்யாவிட்டாலும் மனிதன் என்ற முறையில் எவரிடமிருந்தும் இத்தகைய தவறுகள் நிகழ்வது சகஜம் தான்.

கிரேக்க மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பைபிள் சரியான முறையில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய மூலத்துடன் ஒப்பு நோக்கியாக வேண்டும். மூலமே இல்லை என்ற நிலையில் சந்தேகம் நீங்க வழியில்லை. எந்த இடத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பதை அறிய வழியில்லாத போது ஒவ்வொரு வசனமும் 'தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டது இந்த வசனமாக இருக்குமோ?” என்ற எண்ணத்தை  ஏற்படுத்தி, மொத்த பைபிளையும் சந்தேகத்திற்குரியதாக்கி விடுகின்றது.

ஒரு வேதத்திற்கு இதை விடப் பரிதாபமான நிலை வேறு என்ன இருக்க முடியும்?
நியாய உணர்வுள்ள கிறிஸ்தவ நண்பர்களே! இதைச் சிந்திப்பீர்களா!

வரலாற்று முரண்
 இந்த ஒரு காரணத்திற்காக மட்டும் பைபிள் இறை வேதம் அல்ல என நாம் கூற வரவில்லை. இன்னும் ஏராளமான காரணங்கள் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.

பழைய ஏற்பாடு என்பது பல்வேறு தீர்க்கதரிசிகளுக்கு வழங்கப்பட்ட வேதங்களின் தொகுப்பு என்பதை முன்னரே நாம் கண்டோம். (அதாவது கிறிஸ்தவ நம்பிக்கையின் படி)
உதாரணமாக, பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களான ஆதியாகம், யாத்திராகம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகியவை மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டவை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். தவ்றாத் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுவது, இந்த ஐந்து ஆகமங்கள் தாம் என்று முஸ்லிம்களிடம் ஊடுறுவிக் குழப்பம் விளைவிக்கும் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இந்த ஐந்து ஆகமங்களில் ஒன்றான உபாகமத்தின் இறுதி வசனத்தைப் பாருங்கள்.
  
1. பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர்அவனுக்கு, தாண் மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும்,
  
2. நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம் வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,
  
3. தென்புறத்தையும், சோவாவரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர் முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார்.
  
4. அப்பொழுது கர்த்தர்அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இது தான். இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அவ்விடத்திற்குக் கடந்து போவதில்லை என்றார்.
  
5. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின் படியே மரித்தான்.
  
6. அவர்அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள் வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.
  
7. மோசே மரிக்கிற போது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
  
8. இஸ்ரவேல் புத்திரர்மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது.
  
9. மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின் மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர்அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர்மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.


10. மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர்அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும்,


11. அவன் இஸ்ரவேலர்எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால்,


12. கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப் போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.

(மோசே எனும் தீர்க்கதரிசியால் எழுதப்பட்டது என்று கிறிஸ்தவ உலகம் நம்புகின்ற உபாகமகத்தின் 34:1 முதல் 34:12 வரையிலான வசனங்கள் இவை)
மோசே எழுதிய இந்த ஆகமத்தில் மோசேயின் மரணம் பற்றிய செய்தியும் அவரை அடக்கம் செய்த விபரமும் மரணிக்கும் போது மோசேயின் வயது எவ்வளவு என்ற விபரமும் மோசேயின் மரணத்திற்குப் பின் இஸ்ரவேலர்கள் முப்பது நாட்கள் துக்கங் கொண்டாடிய செய்தியும் மோசேவுக்குப் பிறகு யோசுவா என்பவர்அடுத்த தலைவராக ஆகிய விபரமும் எப்படி இடம் பெற முடியும்?

இதிலிருந்து இந்த ஆகமங்களுக்கும், மோசேவுக்கும் யாதொரு சம்பந்தமம் இல்லை என்பதை அறிவுடையோர்உணரலாம். மிக மிகப் பிற்காலத்தில் இது யாராலோ எழுதப்பட்டு மோசேயின் பெயரால் அரங்கேற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது
இதிலிருந்து உறுதியாகின்றது.

மேற்கண்ட பைபிள் வசனங்களில் 'மோசேவுக்கு நிகரான தீர்க்கதரிசி இஸ்ரவேலில் பிற்காலத்தில் தோன்றியதில்லை!' என்ற வாசகம் கவனிக்கத்தக்கது.

பிற்காலத்தில் மோசேயைப் போல் எவரும் தோன்றவில்லை என்பது இறந்து போய் அடக்கம் பண்ணிய பிறகு மோசேவுக்கு எப்படித் தெரியும்? அதை மோசே எப்படி எழுதியிருக்க முடியும் என்பதையாவது சிந்திக்கக் கூடாதா? பிற்காலம் வரை வாழ்ந்து, அந்தக் காலம் வரை மோசேயைப் போல் எவரும் தோன்றியதில்லை என்பதை அறிந்வர் தாம் இப்படிச் சொல்ல முடியும். மோசேவுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களாலேயே இந்த ஆகமம் எழுதி செருகப்பட்டுள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கிறிஸ்தவத் திருச்சபையிடம் பதிலில்லை. எந்த விதமான சமாதானமும் கூற முடியாத அளவுக்குக் கேள்விகள் நியாயமாக உள்ளதால் கிறிஸ்தவ உலகம் பின்வரும் பதிலைக் கூறுகின்றது:-

மோயிசனின் (மோசே) மரணத்தைக் குறித்த பகுதியுடன் இப்பகுதி முடிவடைகின்றது. இதைப் பிற்காலத்தில் இந்த நூலில் சேர்த்திருக்கலாம். (பார்க்க: கத்தோலிக்க பைபிள்-உபாகமம் முன்னுரை)

அதாவது இந்தப் பகுதி மட்டும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஒப்புக் கொள்வதன் மூலம் இதைத் தவிர உள்ள மற்ற பகுதிகளின் புனிதத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது கிறிஸ்தவத் திருச்சபை.

இந்தப் பகுதி பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்றால் இன்னும் வேறு எவையெல்லாம் சேர்க்கப்பட்டிருக்கும் என்ற ஐயம் ஏற்படாதா? கிறிஸ்தவ நண்பர்களே!

பிற்காலத்திலும் கூட எதையும் சேர்க்கலாம் என்ற அளவுக்கு அவ்வளவு பாதுகாப்பற்ற பரிதாபமான நிலையில் தான் பைபிள் இருந்து வந்துள்ளது என்பது உங்களுக்குப் புலனாகவில்லையா?

பிற்காலத்தில் தான் இவை சேர்க்கப்பட்டன என்றால் இதை எப்படிக் கண்டு பிடிப்பது? மூலத்துடன் ஒத்துப் பார்க்கலாமே என்றால் மூலம் உலகிலேயே இல்லையே!.

இங்கே மற்றொரு நியாயமான சந்தேகமும் நமக்கு வருகின்றது. பின்னாளில் தான் மோசே மரணம் சம்பந்தப்டட பகுதி சேர்க்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளும் கிறிஸ்தவ உலகம், இடைச் செருகல், பிற்சேர்க்கை என்று தெரிந்த பிறகு அதை அப்புறப்படுத்தாதது ஏன்? வேதத்திலிருந்து அதை நீக்கிவிடுவது தானே முறை! இதையும் செய்யவில்லை.

இதை நீக்கிவிட்டால் இன்னும் ஏராளமான அபத்தங்கள் பைபிள் முழுவதும் மலிந்து கிடக்கின்றனவே அவற்றையும் நீக்க வேண்டியது வரும். அப்படி நீக்கினால் இப்போது இருக்கும் பைபிளில் கால் பாகம் கூட மிஞ்சாது. (அந்த அபத்தங்கள் பிறகு அடையாளம் காட்டப்பட்டுள்ளன.)

இதற்கெல்லாம் அஞ்சித் தான் கிறிஸ்தவத் திருச்சபைகள் இடைச்செருகல் என்று தெரிந்தும் கூட அதை நீக்குவதற்குத் தயக்கம் காட்டுகின்றன. பழைய ஏற்பாட்டின் நிலை இதுவென்றால் புதிய ஏற்பாடும் இதற்குத் தப்பவில்லை.

 புதிய ஏற்பாட்டின் முகப்பில் இயேசு கிறிஸ்தவனின் பரிசுத்த சுவிசேஷம் என்று கத்தோலிக்க பைபிளிலும் 'நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு' என்று புரோட்டஸ்டண்டு பைபிளிலும் குறிப்பிடப்படுகின்றது.

அதாவது பைபிளின் புதிய ஏற்பாடு இயேசுவால் எழுதப்பட்டது என்று நமப் வைக்க முயல்கிறது கிறிஸ்தவ உலகம்.

புதிய ஏற்பாடு என்பது இயேசுவாலேயே எழுதப்பட்டது என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம். அப்படியானால் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மரணம், அவரது அடக்கம், அவருக்காக துக்கம் கொண்டாடிய விபரம் ஆகியவை இடம் பெற்றுள்ளனவே அது எப்படிச் சாத்தியமாகும். இயேசுவுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

பிற்காலத்தில் சாதாரண மனிதர்களால் எழுதப்பட்டு அந்தத் தீர்க்கதரிசிகளின் பெயரால் சுவிசேஷங்கள் அறிமுகம் செய்யப்பட்டன என்பதே உண்மை. பைபிள் இறைவேதமாக இருக்கவே முடியாது என்பதற்கு இவை மட்டுமின்றி இன்னும் அனேக சான்றுகளும் உள்ளன.

தெளிவான வாக்குமூலம்
 பைபிளின் முன் பக்கத்தில் தான் புதிய ஏற்பாடு இயேசுவுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புதிய ஏற்பாட்டின் உள்ளே மத்தேயு மார்க்கு, லூக்கா, யோவான் ஆகியோர்எழுதியதாகக் காணப்படுகின்றது! எந்தவொரு இடத்திலும் இயேசு எழுதியதாக பைபிளில் இல்லவே இல்லை. முன் சொன்ன நான்கு சுவிசேஷர்களும் இன்றைய கிறிஸ்தவத்தை உருவாக்கிய பவுலும் புதிய ஏற்பாட்டில் உள்ளவற்றை தாங்கள் சுயமாகப் எழுதியதாக வாக்குமூலம் தந்துள்ளனர்.

பைபிளின் புதிய ஏற்பாட்டில் மூன்றாவது சுவிசேஷம் லூக்கா என்பது. லூக்கா என்பவர்பரிசுத்த ஆவியின் உந்துதலால் அதை எழுதினார்என கிறிஸ்தவ உலகம் நம்புகின்றது. இந்த லூக்கா என்பவர்தருகின்ற வாக்குமூலத்தைப் பாருங்கள்!

'மகாகனம் பொருந்திய தெயோப்பிலுவே! நீங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற சந்ததிகளை ஆரம்ப முதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு அறிவித்தபடியே அவைகைளைக் குறித்து சரித்திரம் எழுத அனேகர் ஏற்பட்ட படியினாலேயே ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர்அறிய வேண்டும் என்று அவர்களை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நல்லமாய்த் தோன்றிற்று. (லூக்கா 1:2-4)

இது நான் நேரடியாகப் பார்த்து எழுதிய வேதம் அன்று; பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்டதுமன்று; நான் விசாரித்தறிந்ததையே எழுதியிருக்கின்றேன் என லூக்கா ஒப்புக் கொள்கிறார். கடந்த் காலத்தில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு எனவும் ஒப்புக் கொள்கிறார். அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்ததை நான் கண்ணால் கண்டதில்லை என்றும் ஒப்புக் கொள்கின்றார். இவ்வளவு தெளிவான வாக்கு மூலத்திற்குப் பிறகும் பைபிளை இறை வேதம் என்று யார் தான் நம்ப முடியும்?

புதிய ஏற்பாட்டின் நான்காவது சுவிசேஷத்தை எழுதியவர்யோவான். இவரும் பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் தான் இதை எழுதினார்எனத் திருச்சபைகள் சாதிக்கின்றன. சம்பந்தப்பட்ட யோவானோ அதை மறுக்கிறார். இதோயோவான் கூறுவதைக் கேளுங்கள்:-

இயேசு செய்து வேறு அனைத்து காரியங்களும் உண்டு. அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்களை உலகம் தானும் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.

(யோவான் 21:25)

இது இறைவேதம் என்பதும் இறைவனின் கட்டளைப் பிரகாரமே எழுதப்பட்டது என்பதும் உண்மையானால் அனேக காரியங்களை யோவான் எப்படி எழுதாமல் விட்டிருக்க முடியும்? இயேசுவைப் பற்றி விசாரிந்தறிந்தவைகளை இவர்சுயமாக எழுதியதனாலேயே காகிதங்கள் போதாதென்று காரணங்காட்டிப் பல விஷயங்களை விட்டு விட்டார். தாம் எழுதியது இறை வேதம் அல்ல என யோவான் இவ்வளவு தெளிவான வாக்குமூலம் தந்த பிறகும் பைபிளுக்கு வேத முலாம் பூசுவது நியாயமா என்பதைக் கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்!

புதிய ஏற்பாட்டின் மிகப்பெரும் பகுதியை எழுதிய அப்போஸ்தலர்பவுல் என்பார்பல இடங்களில் தருகின்ற வாக்கு மூலங்களும் பைபிள் இறைவேதம் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

தேவனே சத்தியர், எந்த மனிதனும் பொய்யர், நான் மனுஷர்பேசுகிற பிரகாரமாய் பேசுகிறவன். நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்னுடைய பொய்யினால் தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமை உண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்.

(ரோமர் 3:4-7)

தேவனுக்கு மகிமையுண்டாக்குவதற்காகப் பொய் பேலாம் என்ற புதிய தத்துவத்தை உதிர்ப்பதுடன், தாம் பேசுவது பொய் எனவும் பவுல் வாக்கு மூலம் தருகின்றார். எதைப் பொய் என்று பவுல் பச்சையாக ஒப்புக் கொள்கிறாரோ அதுவும் புதிய ஏற்பாட்டின் ஒரு பகுதியாக -புனித வேதமாக- இடம் பெற்றுள்ளது.

திருவாளர்பவுல் மேலும் கூறுவதைக் கேளுங்கள்:

நான் ஒருவனுக்கும் அடிமைப்படாதவனாய் இருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு என்னைத் தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிக்கு ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். நியாயப் பிரமாண மில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவனுக்கு நியாயப் பிரமாணமில்லாதவனைப் போலவுமானேன். அப்படி இருந்தும் நான் தேவனுக்கு முன்பே நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்கு உள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு பலவீனருக்கு பலவீனரைப் போலவுமானேன். எப்படியாயினும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன் பங்காளியாகும் படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.

 (முதலாம் கொரிந்தியர்9:19-23)

பைபிள் என்பது மனிதனின் கற்பனையில் உருவானது என்பதற்கு இதை விட சான்று  தேவையில்லை. எல்லோருக்கும் எல்லாமுமாக நடித்து, திட்டமிட்டுப் பொய் கூறுகிறேன்; வேதத்தில் எனக்கும் பங்கு இருக்கும் படிக்கே இவ்வாறு செய்கிறேன் என்ற இவ்வளவு தெளிவாக பவுல் வாக்குமூலம் தருகிறார். கிறித்தவ நண்பர்களே! மேலே உள்ள இந்த பைபிளின் வாசகத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள்! பைபிள் இறை வேதமாக இருக்கக் கூடுமோ என்ற கடுகளவு நம்பிக்கை இருந்தாலும் அது தகர்ந்து விடுகிறதல்லவா?

 இதன் பிறகும் கூட பைபிளை இறை வேதம் எனவும் பரிசுத்த ஆவிகளால் எழுதப்பட்டது எனவும் நம்புவதற்கு இடமுண்டா?

மேலும் பவுல் கூறுவதைக் கேளுங்கள்!

நான் கொஞ்சம் புத்தியீனமாய்ப் பேசுகிறேன். நீங்கள் இதைப் பொறுத்துக் கொண்டால் நலமாயிருக்கும். பொறுத்தும் இருக்கின்றீர்களே!
(இரண்டாம் கொரிந்தியர் 11:1)

பின்னும் நான் சொல்லுகிறேன். ஒருவனும் என்னைப் புத்தியீனன் என்று எண்ண வேண்டாம். அப்படி எண்ணிக் கொண்டாலும் நானும் சற்றே பெருமை பாராட்டும்படி புத்தியீனனைப் போலாவிலும் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்! இப்படி நான் பேசுகிறது ஆண்டவருக்கு ஏற்றபடி பேசாமல் பெருமை பாராட்டும் என்ற தைரியத்தினால் புத்தியீனனைப் போல் பேசுகிறேன்.

 (இரண்டாம் கொரிந்தியர் 11:16,17)

நான் புத்தியீனனானேன். இதற்கு நீங்களே என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நீங்கள் தான் என்னை மெச்சிக்கொள்ள வேண்டியாதாயிருந்தது. நான் ஒன்றுமில்லை; ஆகிலும் மகாபிரதான அப்போஸ்தலர்களை விட எவ்வகையிலும் நான் குறைவுள்ளவனல்ல.
(இரண்டாம் கொரிந்தியர் 12:11)

இவை யாவும் பவுல் தரும் வாக்குமூலங்கள். புத்தி கெட்டுப் போய் உளறுவதாகவும் பிறரது வற்புறுத்தலுக்காகவே தாம் பேசுவதாகவும் பேசுவது ஆண்டவரல்லர்தம் தைரியத்தினாலேயே தாம் பேசுவதாகவும் தெளிவாக ஒப்புக் கொள்கிறார்பவுல்.
அந்தப் புத்திகெட்ட உளறல்களும் பிறரது வற்புறுத்தலுக்காகவும் தம் சொந்த தைரியத்தினாலும் பேசிய பொய்களும் எப்படி இறை வேதமாக இருக்க முடியும்? எதனை வேதம் என்று கிறித்தவ உலகம் நம்புகின்றனவோ அந்த வேதத்திலேயே இந்த வாக்கு மூலங்களும் இடம்பெற்றுள்ளன. இதை விடப் பெரிய முரண்பாடு வேறு என்ன இருக்க முடியும்? இதன் பிறகுமா பைபிள் இறைவேதம் என்று நம்புகின்றீர்கள்?
மேலும் பவுல் தரும் வாக்கு மூலங்களைக் கேளுங்கள்!
மற்றவர்களுக்கோ  ஆண்டவரல்ல நானே சொல்லுவதாவது
(முதலாம் கொரிந்திரியர் 7:12)

கன்னிகைகளைக் குறித்து ஆண்டவரால் எனக்குக் கட்டளையில்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறதற்கு ஆண்டவரால் இரக்கம் பெற்றவனாய் என் அபிப்பிராயத்தைச் சொல்கிறேன்.
(முதலாம் கொரிந்திரியர் 7:25)

எனினும் அவள் அப்படியே இருந்துவிட்டால் அதிகப் பாக்கியவதி என்பது என்பதும் என் அபிப்பிராயம் நானும் கடவுளின் ஆவியுடையவன் என்று எண்ணுகிறேன்.

 (முதலாம் கொரிந்திரியர் 7:40)

பவுல் ஆகிய நான் இதை என் கைப்பட எழுதியிருக்கிறேன். நானே அதைச் செலுத்தித்தீர்ப்பேன்.
 (பிலமோனுக்கு எழுதின நிரூபம்,19)
இந்த வாக்குமூலங்களிலிருந்து தெரிய வருவது என்ன? வேதங்களின் போதனைகளை மறைத்து விட்டு பவுல் என்ற சவுல் தமது சொந்தச் சரக்குகளை கலந்து வேதங்களை அறிமுகப்படுத்தினார். வேதத்தின் கட்டளைகள் பலவற்றைப் புறக்கணித்து புது மார்க்கம் கண்டார்என்பதைத் தவிர வேறு என்ன?

பன்றியின் மாமிசம், மதுபானம் போன்றவை வேதத்தில் தடை செய்யபட்டிருந்தும் அந்தத் தடையை இவர்சுயமாக நீக்கினார். இல்லறத்தை வேதம் போதிக்க, துறவை இவர் நியாயப்படுத்தினார். விருத்த சேதனத்தையும் இவர்ரத்துச் செய்தார். இவற்றையெல்லாம் இறைக் கட்டளையின் படியே தாம் செய்வதாகக் கூறி மக்களை ஏமாற்றினார். (பைபிளில் முரண்பாடுகளைப் பற்றி அலசும் போது இதை விபரமாக நாம் தருவோம்) இப்படியெல்லாம் இயேசு போதிக்காத புதிய மார்க்கம் கண்டவர், அது கடவுளின் புறத்திலிருந்து அவருக்கு வந்திருக்குமானால் அதில் உறுதியாக இருக்க வேண்டுமல்லவா? மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர்பலமுறை பல்டியத்துள்ளதை அவரே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்.

 பின்பு அவனிடம் சகோதரனே! யூதருக்குள் பல்லாயிரம் பேர்விசுவாசியாக இருக்கதைக் காண்கிறீரே அவர்கள் எல்லோரும் நியாயப் பிரமானத்தைக் குறித்து வைராக்கியம் உள்ளவர்கள். புற ஜாதிகளிடத்திலிருக்கின்ற யூதர்எல்லோரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்த சேதனஞ் செய்யாமலும் முறைமைகளின்படி நடவாமிலிருந்து மோசேயை விட்டு மாறுபட நீர்உபதேசிக்கின்றீர்என்று உம்மைப் பற்றி இவர்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கின்றது. இப்படியிருக்க செய்ய வேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீர் என இவர்கள் கேள்விப்படுவது நிச்சயம். ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்கிறதைச் செய்யும். பொருத்தனை பண்ணிக்கொண்ட நாலு பேர்எங்களிடம் இருக்கிறார்கள். அவர்களைச் சேர்த்துக் கொண்டு நீரும் அவர்களோடு சுத்திகரிப்பு செய்து கொள்ளும். அவர்கள் தலைச் சவரஞ் செய்து கொள்வதற்கு அவர்களுக்காக நீரே செலவு செய்யும். அப்படிச் செய்தால் உம்மைப்பற்றி போதிக்கப்பட்டவைகள் அப்பத்தமென்றும் நீரும் நியாயப் பிரமானத்தைக் கொண்டு நடக்கிறவரென்றும் யாவரும் அறிந்து கொள்வார்கள்.

விக்கிரகங்களுக்குப் பலியிட்டதற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததற்கும், வேசித்தனத்திற்கும் விசுவாசிகளான புற ஜாதிகள் விலகியிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் அவர்களைப் பற்றி தீர்மானம் அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். அப்பொழுது பவுல் அந்த மனுசரைச் சேர்த்துக் கொண்டு மறுநாள் அவர்களோடு தானும் சுத்திகரிப்புச் செய்து கொண்டு தேவாலயத்தில் பிரவேசித்து சுத்திகரிப்பு நாட்கள் எப்பொழுது நிறைவேறும் என்றும் ஒவ்வொருவனுக்காகவும் எப்பொழுது பலி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தான்

 (அப்போஸ்தலர் 2:20-26)
பைபிள் என்பது பவுலின் சொந்தத் தயாரிப்பு என்பதும் அதில் கூறுகின்ற போதனைகளிலும் அவருக்கே உறுதியில்லை என்பதும் கர்த்தருக்கும் இயேசுவுக்கும் இதில் யாதொரு சம்பந்தமுமில்லை என்பதும் மோசேயின் நியாயப்பிரமானங்களை இவர்அலட்சியப்படுத்தியவர்என்பதும் இதன் மூலம் தெரியவருகின்றதல்லவா?

பைபிளிலேயே இந்த வாக்குமூலங்கள் இடம் பெற்று இது மனிதக் கற்பனையே என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கையில் கிறித்தவர்கள் அதை வேத நூலாக நம்புவது ஆச்சரியத்திலும் ஆச்சரியமல்லவா!

0 comments: