நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Monday, November 29, 2010

வறுமை ஒழிப்பில் இஸ்லாமின் பங்கு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN8oW8GeupVlBEsh0YLhcKGu5VpLvYI_8VB17dsgn-mhf4NOpxwLCWWtTl5yW7O34Nq08i3vGeZUHMPLtIOQFJ-T5ujJQCT-ChqlgcrA5b-rSj9bjLvtnQlk59wHXxQeI8P3oC9-wNEo4/s1600/Bismillah_2.JPG


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...



http://www.satyamargam.com/images/stories/news10/poverty.jpgமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுடைய யாராலும் வறுமையையும் வறுமையினால் ஏற்படுகிற தனிமனித மற்றும் சமூகக் கேடுகளைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க முடியாது.  இதற்கு ஒரு முஸ்லிம் விதிவிலக்கல்ல.  வறுமை, மனிதனின் ஆற்றல் மற்றும் கண்ணியத்தின் ஊற்றுக் கண்களையே அழித்துவிட வல்லது.  மனிதனை இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாக்கி, ஒழுங்கீனத்தில் மூழ்கவைத்து, குற்றங்கள் புரிய வறுமை காரணமாகி விடுகிறது.
 
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் வறுமையின் கொடுமையிலிருந்து பாதுகாப்பு தேடி வந்தார்கள். "இறைவா!  வறுமையிலிருந்தும் இறைமறுப்பிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன்" என நபியவர்கள் கோரிவந்தார்கள். (நஸயீ).  வறுமை, இறைமறுப்பு ஆகிய இரண்டையும் இணைத்துப் பேசியிருப்பதே வறுமை ஒரு முஸ்லிமின் மனதில் எவ்வளவு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது என்பதை அறிந்துக் கொள்ளப் போதுமான சான்றாகும்.  (அ. முஹம்மது கான் பாகவி, 'இஸ்லாமும் பொருளாதாரமும்').

1970-களில் வங்கதேசத்தில் நிலவிய கடும் பஞ்சத்தில் வறியவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானதைக் கண்டு, நிலைமையைச் சீர்செய்ய தம்மாலானதைச் செய்ய முனைந்தார் பொருளியலாளரான முஹம்மது யூனுஸ்.  ஆனால் அவர் கற்றிருந்த பொருளியல் சித்தாத்தங்களில் பஞ்சத்தையும் வறுமையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றி எதுவுமே சொல்லித்தரப் பட்டிருக்கவில்லை என்பது அப்போதுதான் அவருக்குப் புரிந்தது.
"அதி புத்திசாலிகளான பொருளியல் வல்லுனர்கள், வறுமையையும் பட்டினியையும் பற்றிச் சிந்திப்பதுகூட காலவிரயம் என்று எண்ணி அப்பிரச்சினைகளைக் கண்டுகொள்ளவேயில்லை. 'சமூகப் பொருளாதாரம் பொதுவாக செழிப்படையும்போது இந்தப் பிரச்சினைகள் தானே தீர்ந்து விடும்' என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.  பொருளாதார முன்னேற்றத்தின் பல நிலைகளைப் பற்றியும் அலசி ஆராய்வதில் தங்கள் திறமை அனைத்தையும் செலவிடும் அவர்கள், வறுமையும் பஞ்சமும் ஏற்படுவதற்கான மூல காரணிகளைப் பற்றி மிக அரிதாகவே சிந்திக்கின்றனர்.  எனவே, உலகில் வறுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது"
உண்மைதான்.  இன்றைய உலகில் நடைமுறையில் உள்ள இரு பெரும் பொருளியல் கோட்பாடுகளில், முதலாளித்துவம் முதலாளிகளின் நலனை மட்டுமே பாதுகாப்பதிலும் பொதுவுடைமைக் கோட்பாடு வர்க்கப் போராட்டங்களைத் தூண்டிவிடுவதிலுமே கவனம் செலுத்துகின்றன.  ஆனால் இஸ்லாமியப் பொருளியல் மட்டுமே வறுமை ஒழிப்பு உள்ளிட்ட எல்லா பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் தக்க தீர்வைத் தருகிறது.  (http://www.satyamargam.com/1183).

பொருளாதார சுழற்சி:

"பல ஊர்வாசிகளிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவை அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் (அவருடைய) பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியவையாகும்.  செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்கள் இடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி அல்லாஹ் கட்டளையிடுகின்றான்). (குர்ஆன் 59:7)

செல்வம் சமூகத்தின் எல்லாத் தரப்பினருக்குமிடையே சுழன்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பது இஸ்லாமியப் பொருளியலின் அடிப்படை அம்சங்களுள் ஒன்று.  வட்டி தடை செய்யப்பட்டிருப்பதும் ஜகாத், ஸதகா, ஹஜ் போன்ற பொருள் சார்ந்த வணக்க வழிபாடுகளும் இஸ்லாமிய வாரிசுரிமை போன்றச் சட்டங்களும் செல்வம் ஒரே தரப்பாரிடம் தேங்கிக் கிடப்பதைத் தடுத்து அதன் சுழற்சியையைத் தோற்றுவிக்கின்றன.

"யார் பொன்னையும் வெள்ளியையும் திரட்டி வைத்துக் கொண்டு, அவற்றை இறைவழியில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு என்று (நபியே) நீர் நற்செய்தி கூறுவீராக!" (குர்ஆன் 9:34) என்ற இந்த இறைவசனம் பொருளை இறைவழியில் செலவு செய்யாமல் தடுத்துக் கொண்டவர்களைக் கடுமையாக எச்சரிக்கிறது.

செல்வத்தில் வறியோரின் பங்கு:

"வானங்கள், பூமி, அவற்றுக்கு இடையே இருப்பவை மற்றும் பூமிக்கடியில் புதைந்து கிடப்பவை அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை" (குர்ஆன் 20:6)

"அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்து நீங்கள் அவர்களுக்குக் கொடுங்கள்" (குர்ஆன் 24:33)

"அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புங்கள்.  அவன் உங்களை எந்தச் செல்வங்களுக்குப் பிரதிநிதிகளாக்கினானோ அதிலிருந்து (தானமாகச்) செலவு செய்யுங்கள்." (குர்ஆன் 57:7)


மேற்கண்ட இறைவசனங்கள் இவ்வுலக வாழ்வில் செல்வ வளங்கள் அருளப்பட்டவர்கள் அல்லாஹ்விற்குச் சொந்தமான பொருளுக்குப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்களேயொழிய அச்செல்வத்தின் மீது அவர்கள் முழு அதிகாரம் படைத்தவர்கள் அல்லர் என்பதை வலியுறுத்துகிறது.  இஸ்லாமியப் பொருளியலின் இன்னொரு அடிப்படை அம்சம் இது.  உரிமையாளரின் ஆணைகளைச் செயல்படுத்துவதுதான் பிரதிநிதியின் பொறுப்பு.  எனவே அல்லாஹ் வழங்கியுள்ள செல்வத்திலிருந்து அவனது கட்டளைப்படி வறியவர்களுக்கு உரிய பங்கைப் பிரித்து அளிக்க வேண்டியது செல்வம் வழங்கப்பட்டவர்கள் மீதான கடமை.


அவ்வாறே, ஜகாத் என்பது பணக்காரரின் செல்வத்தில் ஏழைகளுக்குரிய ஒரு பங்கே ஆகும்.  எனவே ஜகாத் கடமையான ஒருபொருள் அதன் உரிமையாளருக்கும் ஜகாத் பெறத் தகுதியுடைய ஏழைகளுக்கும் கூட்டான பொதுவுடைமை என்றே சொல்லலாம். எனவேதான் ஜகாத் கடமையாகியுள்ள ஒருபொருளை அல்லது சொத்தை, அதன் மீது கடமையான ஜகாத்தை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே விற்பனை செய்வது கூடாது எனவும் சில மார்க்க அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வசதியில்லாதோரும் வறியோருக்கு உதவ வேண்டும்:

ஜகாத் பெறத் தகுதியுடையவர்கள் என அல்லாஹ் வரையறை செய்திருப்பவர்களுள் முதல் பிரிவினர் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள வசதியற்ற வறியவர்கள்.  இவர்களின் உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவுவது ஜகாத் கொடுக்கும் அளவிற்கு வசதி படைத்த செல்வந்தர்கள்மீது மட்டும் உள்ள கடமை அல்ல.  ஒருவரிடம் தனது குடும்பத்திற்கு மட்டுமே போதுமான உணவு இருந்தால்கூட அதைப் பட்டினியால் வாடும் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளும்படி சொல்லித்தருகிறது இஸ்லாம்.

நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: "அபூதர்ரே! நீர் ஆணம் சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக்கொண்டு பிறகு உமது அண்டை வீட்டாரைக் கவனித்து நல்லவிதமாக அவர்களுக்கும் சிறிது கொடுங்கள்" (ஸஹீஹ் முஸ்லிம்).

தனது அண்டை வீட்டார் வறுமையிலும் சிரமத்திலும் இருக்கும் நிலையில் தான் மட்டும் வளமையும் வசதியுமாக ஆடம்பரத்துடன் இருப்பதை ஓர் உண்மை முஸ்லிமின் உள்ளம் ஒப்புக்கொள்ளாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தமது அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் இறைவிசுவாசியாக மாட்டார்" (முஸ்னத் அபூ யஃலா).

வறியவரின் துயர் துடைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்பதை இதை விட எளிமையாக யாராலும் சொல்ல முடியாது.

வறியோர் நலம் பேணுதல் மார்க்கத்தின் ஓர் அங்கம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மார்க்கம் என்பது பிறர்நலம் பேணுவதாகும்". நாங்கள் கேட்டோம், "யாருக்கு அல்லாஹ்வின் தூதரே?" நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அவர்களின் பொதுமக்களுக்கும்" என பதிலளித்தார்கள்
(ஸஹீஹ் முஸ்லிம்).

மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மூஃமின் மற்றொரு மூஃமினுக்கு கட்டடத்தைப் போன்றவராவார்.  அதில் ஒரு பாகம் மற்றொரு பாகத்திற்கு வலுச் சேர்க்கிறது" (ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).

மேலும் கூறினார்கள்:
"மூஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும் கருணை காட்டுவதற்கும் இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது ஓர் உடலைப் போன்றதாகும்.  அதில் ஏதேனும் ஓர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலையும் தூக்கமின்மையையும் முறையிடுகின்றன" (ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).

நம்பிக்கையாளர்கள் ஒரு கட்டடத்தைப் போலவும் ஓர் உடலைப் போலவும் இணைந்திருக்க வேண்டியவர்கள் என்ற இந்த உதாரணங்கள், சமுதாயத்தில் ஒரு பிரிவினர் நலிவடைந்திருந்தால் அவர்களுக்கு வசதி படைத்த மற்றவர்கள் உதவ வேண்டும் என்பதையும், அவ்வாறு உதவிகள் செய்வது அந்த வறியவர்களுக்குப் பலனளிப்பதோடு மட்டுமல்லாமல் முழு சமுதாயத்திற்குமே பலனளிக்கும் என்பதையும் வலியுறுத்துகின்றன.

செல்வ வளம் படைத்தவர்கள் ஏழை எளியவர்களுக்கு ஜகாத் வழங்குவதால் அவர்களின் மனம் பொறாமை, வஞ்சினம் போன்ற தீய குணங்களிலிருந்து தூய்மையாகிறது.  சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடையேயும் பரஸ்பர அன்பும் புரிந்துணர்வும் தோன்றுகின்றன.  வர்க்க பேதங்கள் வலுவிழக்கின்றன. அப்படியே இருந்தாலும் அவை மோதல்களாக உருவெடுக்காமல், ஏழை வர்க்கத்தின் பொறாமை போன்ற சில தீய எண்ணங்களிலிருந்து செல்வந்தர்கள் பாதுகாப்புப் பெறுவர்.  சமூகத்தில் வீண் குழப்பங்களும் பதற்றங்களும் அகன்று அமைதியான சூழல் நிலவ வாய்ப்பு ஏற்படும்.  நாட்டின் பொதுஅமைதிக்கும் அது வகை செய்யும்.

 சகோதரர் சலாஹுத்தீன்
சத்தியமார்க்கம்

Sunday, November 21, 2010

பெண்களும், மெனோபாஸ் காலமும்


  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...


                      ஹெச். ஃபாத்திமா அஜீஸ், கல்பாக்கம்

நபியே! மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை, எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! அல்லாஹ் திருந்திக் கொள்ளுவோரை விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்எனக் கூறுவீராக என்று கூறுகிறான்.
(அல்குர்ஆன் 2:222)


பெண்கள் பருவமடைந்த பிறகு சராசரியாக அவர்களுக்கு 40 வயது முதல் 50 வயது வரை மாதவிடாய் வந்து பின்பு முற்றிலுமாக இது நின்றுவிடுகிறது. இது முழுவதுமாக நின்றுபோகும் நிலையை ஆங்கிலத்தில் மெனோபாஸ் என்கிறார்கள். இந்த காலகட்டம்தான் பெண்களுக்கு சோதனையான காலகட்டமாக உள்ளது. மெனோபாஸ் என்கிற நிலையை உணர பெண்களுக்கு கிட்டத்தட்ட ஒரு வருட காலம் கூட ஆகும். ஏனெனில் சில பெண்களுக்கு 2 மாதங்கள்,  3 மாதங்கள்,  ஏன் 5, 10 மாதங்கள் கூட நின்று விட்டு பின்பு மாதவிடாய் வருவதுண்டு. இறுதியாக சில மாதங்கள் தொல்லை கொடுத்துவிட்டு முழுமையாக நின்றுவிடும்.

இந்த காலகட்டங்களில் பெண்கள் உடல் அளவில், மனதளவில் பல பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். உடல் அளவில் மாற்றங்கள் வருகிறது. அடிக்கட வியர்த்துப் போகுதல், படபடப்பு, கோபம், எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஏதோ தீராத நோய் வந்துவிட்டது போலவும், இறைவன் நம்மை சோதிக்கிறான் என்பது போலவும் ஒரு சிந்தனை வருகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், “மாதவிடாய் என்பது ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்” (புகாரி 5548)

இப்பொழுது பல பெண்மணிகளுக்கு மெனோபாஸ் காலத்திற்குப் பிறகு கர்ப்பப்பை எடுக்க வேண்டிய சூந்நிலை ஏற்பட்டு விடுகிறது. பெரும்பாலும் நிரந்தர கருப்பைத் தடை ஆப்ரேஷன் செய்த பெண்களுக்கு ஒரு முறை வயிற்றை கீறிவிட்டால் நிச்சயமாக பல காரணகாரியங்களுக்காக நாட்பட்ட பல தொல்லைகள், கட்டிகள் தோன்றிவிடுகிறது. இது கர்ப்பப்பை கேன்சராகவும், மார்பக புற்றுநோயாகவும் மாறவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் உடனடியாக கர்ப்பப்பையை எடுத்து விடுகிறார்கள். நிரந்தர கருத்தடை செய்ய வேண்டாம் என இஸ்லாம் இதனால்தானோ நமக்கு தடைவிதித்து இருக்கிறது (இறைவன் அறிந்தவன்). அப்படி கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் மேலே சொன்ன அத்தனை பிரச்சினைகளும் பல மடங்காகிவிடும்.

மாதவிடாய் நின்ற பிறகு வூடினைஸிங் ஹார்மோனும், புரோஜெஸ்டிரான் சுரப்பது குறைந்துவிடுவதால் இரத்த ஓட்டம் குறைந்துவிடுகிறது. திசுக்கள் அனைத்தும் நீர் வற்றி அவற்றின் பலத்தை இழந்துவிடுவதால், மலக்குடல், சிறு நீர்ப்பை பிடிமானம் குறைந்து உரிய இடங்களை விட்டும் கீழே இருக்கும். இதுவே பெண்களுக்கு அசௌகரியமாக இருக்கும்பொழுது, எலும்பின் தன்மையும் முற்றிலுமாக மாறிவிடுகிறது.

மூட்டுக்கு மூட்டு வலி ஏற்படுகிறது. சிறியதாக அடிபட்டாலும்கூட எலும்பு முறிந்துவிடும் அபாயம் ஏற்படும். இவையெல்லாம் உடல் வேதனைகள் என்றால், மனதளவில் இந்த பெண்கள் படும்பாடு மிகவும் வேதனைக்குரியது. நாம் தனிமைபடுத்தப்பட்டுவிட்டோமோ, நம்மை உதாசீனப்படுத்துகிறார்களோ என்று கவலை அடைவார்கள்.

ஒன்றைமட்டும் நாம் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்; 40, 45 வயது என்பது முதுமையான காலம் அல்ல. அது நடுத்தர வயது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். திசுக்களில் நீர் வற்றிவிடுவதால் பிறப்பு உறுப்பு அதன் நெகிழ்ச்சி தன்மையிலிருந்து வறட்சி தன்மைக்கு மாறிவிடுகிறது. இந்த நிலையில் தாம்பத்தியம் வலியுடன் கூடிய மிகுந்த சிரமத்தை உள்ளாக்கிவிடும்.

கணவனை திருப்திப்படுத்த இயலாத பெண்கள் மன தேவனை அடைந்து கணவன்மார்களையே சந்தேகம் கொள்ளுவார்கள். கணவருக்கோ மனைவியின் மீது கடுப்பு ஒரு பக்கம். பெண்கள் தான் பெற்ற பிள்ளைகள் மீது கோபத்தையும், இயலாமையையும் காண்பிக்க, பிள்ளைகளும் இந்த காலகட்டத்தில்தான் பெற்ற தாயை உதாசீனப்படுத்துகிறார்கள்.

கணவன்மார்களும், பிள்ளைகளும் இந்த நேரத்தில்தான் அவர்களுக்கு மிக ஆதரவாக நிச்சயம் இருக்க வேண்டும். இவர்களை மனநோய் தாக்காமல் இருக்க குடும்பத்தார்கள் ஆதரவாகவும், அன்னியோன்யமாகவும் பழக வேண்டும். அவர்களை உரிய மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவதுடன், உடற்பயிற்சியுடன் கூடிய உணவு முறைகளை சீரிய முறையில் நடைமுறைப்படுத்தி உடல்நலம் பெற வேண்டும்.

இந்த தருணத்தில் மார்க்கத்தின் பக்கம் நம் கவனத்தை திருப்புவது மிகுந்த நன்மை பயக்கும். இஸ்லாம் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வை நம்முன் வைக்கிறது.

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றொருவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்.  தீமையை தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாதையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன். ஞான மிக்கவன்
(அல்குர்ஆன் 9:17)
என்று எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் கூறுகிறான். தொழுகையை பேணுதலாக தொழுவதும், முடிந்த அளவு தர்மம் செய்வதும், திக்ருகளில் கவனம் செலுத்துவதிலும் சகோதரிகளே நீங்கள் முனைப்பு காட்டினால் இவையாவும் மனதளவில் நம்மை மறுமை வாழ்விற்கு தயார் செய்துவிடும்.

மார்க்கத்தில் ஈடுபடுவதோடு, சமூகப் பணிகளில் ஈடுபடுவதும் நம்மை சொர்க்கம் கொண்டு சேர்க்கும் ஒரு காரியம் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

சகோதரர்களே! உங்கள் மனைவியை சமூக பணி ஆற்ற அனுமதி தருவதோடு உங்களின் ஒத்துழைப்பையும் கொடுங்கள். மன சஞ்சலம் உள்ள எந்த ஒரு பெண்மணியும் ஆதரவும், அன்பும் தரும் தன் கணவனின் தோளில் சாயும் பாக்கியம் பெற்றால், நெகிழ்ந்துதான் போவார். இதற்காகத்தான் நமது இறைவன் நீங்கள் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் என்கிறான்.

இந்த உலக வாழ்விற்காக நாம் அடையும் உடல் வேதனையைவிட மன வேதனையைவிட மறுமை வாழ்விற்காக நாம் நல்ல அமல்கள் செய்ய வேண்டும். சேகரிக்க வேண்டிய நன்மைகள், ஆற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது. நமக்காக எல்லாம் வல்ல இறைவன் சித்தப்படுத்தி வைத்துள்ள சொர்க்கத்தை அடைய உடல் நலத்தையும், மனபலத்தையும் நிச்சயம் நமக்கு அளிப்பான். மார்க்கத்தின் வழியில் மறுமைக்காவும், குடும்பத்திற்காகவும், சமுதாய நலனுக்காவும் வாழ நமதிறைவன் அருள்புரிவானாக!

மெனோபாஸ் பற்றி ஒரு வார இதழிலில் வந்திருந்தது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது. கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ஆட்பட்டு தினரும் போது கணவனோ, மகனோ அவளின் நிலையை அறிந்து செயல்படுதல் முக்கியம்.

மெனோபாஸ்
45 வயதிற்கு மேல் பெண்ணின் சினைப் பையின் செயல்பாடு குறைந்து மாதவிலக்கு முறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்கு மெனோபாஸ் என்று பெயர்.

பொதுவாக 40 வயதிற்கு மேல் 50 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30 வயதிற்கும் மேல் உள்ள பெண்களுக்கே ஏற்படுகிறது.

அறிகுறி
1. உடல் முழுவதும் வெப்பம் பரவுவது போல இருக்கும். (ஹாட்ஃபாளஷ்).
2. திடீரென வியத்துக் கொட்டும். பனிக்காலமாக இருந்தாலும் வியர்க்கும்.
3. படபடப்பு, சோகம், எரிச்சல், அசதி, அழுகை என மனநிலை மாற்க்கொண்டே இருக்கும்.
4. ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால் தாம்பத்திய உறவில் சிரமம் ஏற்படும்.

செய்ய வேண்டியது
1.                  ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்வது அவசியம்.
2.                  கால்சியம் சத்து குறைவதால் எழும்பு மெலியும் அபாயம் உள்ளது.
3.                  சரியான உணவுப்பழக்கம் இருந்தாலே மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் பல பிரட்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.
4.                  கொழுப்பு நீக்கப்பட்ட பாலால் ஆனா தயிரை தினந்தோறும் சேர்க்க வேண்டும்
5.                  சாப்பாட்டில் எள் நிறைய சேர்க்க வேண்டும்.
6.                  பச்சை காய்கற்கள், பழங்கள் சேர்ப்பது நலம்.
7.                  கைக்குத்தல் அரிசியும், கோதுமை மாவால் செய்யப்பட்ட உணவுகளும் பல குறைபாடுகளை தீர்க்கும்.
8.                  கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்த்து 45 நிமிடங்கள் மாலைவேளையில் நடந்தால் 90 சதவீத மெனோபாஸ் காலத்தில் வரும் நோய்களை தவிர்க்கலாம்.
9.                  கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
கால்சியம் மாத்திரை

சமீபத்தில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒரு கால்சியம் மாத்திரை நிறுவனம் விளம்பரம் செய்து வருகிறது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்காக அதை உட்கொள்ளுமாறு கூறுகிறது. குழந்தைகளின் வளர்ச்சியில் ஆர்வமுள்ள பெற்றோர்கள் அதை வாங்கி குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் எலும்பு வளர்கிறதோ இல்லையோ சிறுநீரக்த்தில் கற்கள் வளர்ந்து விடும்.

சராசரியான குழந்தைக்கு தினம் பாலில் இருக்கும் கால்சியம் அளவே போதுமானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். நமது உடலில் இருக்கும் சத்துகள் குறைந்தால் அதற்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்வதில் நியாயம் இருக்கிறது. நாமாக எதையும் முடிவு செய்து கொண்டு மருந்துகளை எடுத்துக் கொள்வதால் தேவையில்லாத விபரீதங்களே தோன்றுகின்றன.

காய்சலுக்கு பாரசிடமால் எடுத்துக் கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஒரு வார இதழில் அதன் விளைவுகளை படித்த்திலிருந்து நான் பாரசிடமால் பக்கம் போவதே இல்லை. இப்போது சிக்கன் குன்யாவைப் போல பரவலாக ஒரு காய்ச்சல் வருகிறது. டெங்கு காய்ச்சலின் சில அறிகுறிகள் மட்டும் தென்படுகின்றன. அது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை குறைத்து விடுகிறது. வெள்ளை அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்தி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த காய்ச்சல் கொசுவால் பரப்பப்படும் வைரஸால் ஏற்படுகிறது என்று மருத்துவர் சொன்னார்.
எச்சரிக்கையாக இருங்கள் நண்பர்களே.

Thursday, November 11, 2010

ஹிந்து புரோகிதர் இஸ்லாத்தில் இணைந்தார்


                                 ஏக இறைவனின் திருப்பெயரால்......

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...


சுஷில் குமார் ஷர்மா எனும் அப்துர் ரஹ்மான் ஹரியானா மாநிலத்தில் உள்ள அமதல்பூர் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர். அக்கிராமத்தில் உள்ள கோவிலில் மத சடங்குகளை செய்யும் இந்து வைதீக குடும்பத்தில் பிறந்தவர்.மே மாதம்12,2002 அன்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு பணி நிமித்தமாக வந்தார்.

ஜித்தாவில் கம்பெனி இருப்பிடத்தில் தங்கி இருந்த போது உடன் வேலை செய்யும் ஒரு நண்பர் சில இஸ்லாமிய புத்தகங்களை கொடுத்துள்ளார். பிறகு சுஷில் குமார் சர்மா ரியாத் நகரில் உள்ள நௌரா மகளிர் பல்கலைகழகத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அப்துர் ரஹ்மான் கூறுகிறார்.

நௌரா மகளிர் பல்கலைகழகத்தில் கம்பெனி கேம்ப்-ல் இஸ்லாத்தை பற்றி கூறிய நிறைய இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பல நண்பர்களை சந்தித்தேன். அவர்கள் ஒய்வு நேரத்தில் இறைத்தூதர்கள் பற்றியும், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களது பொன்மொழிகள் பற்றியும் கூறுவார்கள்

எனது இதயம் நடுக்கத்திற்கு உள்ளானது. எனது மரணத்திற்கு பிறகு எனது நிலை என்னவாகும்? என்னுடைய பாவங்கள் என்னை நரகத்திற்கு கொண்டு சேர்க்குமா? என்று என்னை நானே கேட்டு கொண்டேன்.நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளின் மண்ணறை வேதனை பற்றி நான் மிகவும் அச்சப்படேன்.
தூக்கமின்றி இரவுகளை கழித்தேன். இஸ்லாத்தை தழுவவும், முஹம்மது நபி(ஸல்) அவர்களை உண்மையாக பின்பற்றுபவனாகவும் மாற இதுவே சரியான தருணம் என உணர்ந்தேன்.என்னுடைய வாழ்வின் உண்மையின் தேடுதல் இஸ்லாத்தில் முழுமை அடைந்தது.

இன வேறுபாடுகள் இல்லாமல் சகோதரத்துவத்தை பேணும் பண்பே இஸ்லாத்தை நோக்கி என்னை ஈர்த்தது.

அல் ஃபத்தாவில் உள்ள இஸ்லாமிய அழைப்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் என்னை கலிமா கூற இமாம் அவர்கள் அழைத்தார்.

“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்” என்று முழுமனதுடன் கூறினேன்.இமாம் அவர்கள் அப்துர் ரஹ்மான் என்று எனது பேரை மாற்றி கொள்ள ஆலோசனை வழங்கினார்கள்.நானும் உடனே முழுமனதுடன் ஒப்புக்கொண்டேன்.

எனக்கு மனைவியும் 16 வயதில் மற்றும் 7 வயதில் இரு மகன்களும் உள்ளனர். இஸ்லாமிய தூதை என்னுடைய குடும்பத்திற்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு என் முன்னால் இருக்கிறது. நான் தொலைபேசி மூலம் இஸ்லாத்தை தழுவியதை குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள் முதலில் நம்பவில்லை. என்னுடைய மனைவி நான் விடுமுறைக்கு இந்தியா வரும் போது முடிவு செய்வதாக கூறுகிறாள்.

ஒவ்வொரு நாளும் அல்லாஹ்விடம் என குடும்பத்தாருக்கு நேர்வழி காட்டவும் அவர்களுடைய இதயங்களை இஸ்லாத்தின் பால் இணக்கமாக்கவும் கண்ணீரோடு அழுது பிரார்த்தித்து கொண்டே இருக்கிறேன்.

ஊர்மக்கள், உறவினர்கள், குடும்பத்தாரின் எதிர்ப்புகளை நான் சந்திக்க வேண்டியிருக்கும்.ஆனால் அவற்றை எதிர்கொள்ள நான் உறுதியாக இருக்கிறேன். “அல்லாஹ் எனக்கு உதவி செய்வான்” என உறுதியாக நம்புகிறேன்.
“இம்மை மறுமையில் வெற்றி பெற இஸ்லாத்தை தழுவுங்கள் என்று முஸ்லிமல்லாத சகோதரர்களை பார்த்து அப்துர் ரஹ்மான் இறுதியாக அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.”
-சவுதிகேசட் நியுஸ்
தமிழாக்கம்: அப்துல்லாஹ் முஹம்மது
 tntj.net

Monday, November 8, 2010

முஸ்லீமாக மாறினார் டோனி பிளேயரின் மைத்துனி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsK8-XbS0C3yjdd9RPAYiG7kVNF5Mrluh7wSk0DtqErRnYp1AvraGrlhmjKZYf-by1ob4M9GnEqbkR27czhxnZ64lOjYwed_ZaEIG4kAb90g4bRabojrhtOY3o34jDf0P5hT6YJSrIYJY/s1600/Bismillah_2.JPG


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...




இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள ஃபாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். 


தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார். 


தற்போது மது அருந்துவதில்லை என குறிப்பிட்ட அவர் 25 வருடங்களாக இருந்த இந்த தீய பழக்கத்தை தற்போது விட்டுவிட்டதாக குறிப்பிட்டார்.
தினமும் மது அருந்தாமல் இருக்க முடியாத தான் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுவதாக கூறினார்.
 
குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும் கூறியுள்ள லாரன் தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டதாக தெரிவித்துள்ளார். ( புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களெல்லாம் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதற்காக குர் ஆனை ஓதுவதற்கும். விளங்குவதற்கும் முயற்சிக்கும்போது முஸ்லீம்களாக பிறந்திருக்கும் நம்மில் பலர் அந்த முயற்சி சிறிதும் இன்றி காலம் கழிப்பது சரிதானா?)


வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா? என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும்? என பதிலளித்தார். காஸாவின் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 நபர்களுடன் சைப்ரஸிலிருந்து காஸாவுக்கு சென்றவர், ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தையும் எதிர்த்தவர் பூத்.  


சமீபத்தில் பூத், ''மார்னிங் ஸ்டார்'' என்ற  நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், டோனி பிளேரை கடுமையாக விமர்சித்திருந்தார். 


அதில், ''பாலஸ்தீனத்தின் ரபா, நபுலஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்து போன தங்களது உறவினர்களின் உடல்கள் மீது விழுந்து அழும் தாய்மார்களி்ன் கண்ணீரை டோனி பிளேர் மறந்து விட்டார். குறைந்தபட்சம், இந்த நகரங்களின் பெயர்களாவது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த நகரங்களைச் சேர்ந்த எத்தனையோ தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை இழந்து பரிதவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர். 

இஸ்ரேலின் இந்த ராட்சத கொடூரத் தாக்குதல்களை அங்கீகரிக்கிறீர்களா பிளேர்?'' என்று காட்டமாக கேட்டிருந்தார்.

  - ஜோதி
 
source: http://www.inneram.com/2010102411414/lauren-booth-converts-to-islam

Read more: http://www.dailymail.co.uk/news/article-1323278/Tony-Blairs-sister-law-Lauren-Booth-converts-Islam-holy-experience-Iran.html#ixzz13LWUHenh

Wednesday, November 3, 2010

அல்லாஹுவை பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்:

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN8oW8GeupVlBEsh0YLhcKGu5VpLvYI_8VB17dsgn-mhf4NOpxwLCWWtTl5yW7O34Nq08i3vGeZUHMPLtIOQFJ-T5ujJQCT-ChqlgcrA5b-rSj9bjLvtnQlk59wHXxQeI8P3oC9-wNEo4/s1600/Bismillah_2.JPG

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...



அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிகள்:

முதல் அடிப்படை:

அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி வந்துள்ள அல்குர்அன் வசனங்களையும் நபிமொழிகளையும் அணுகும் முறை.

அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் பொறுத்தவரை அவை தருகின்ற வெளிப்படையான கருத்திலேயே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது. ஏனெனில் அல்குர்ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டுள்ளது. அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் அரபு மொழியையே பேசினார்கள்.

அல்குர்ஆனும் நபிமொழிகளும் தருகின்ற வெளிப்படையான கருத்துக்களை விட்டுவிட்டு அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுவதாக அமையும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

‘வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும் இரகசியமானதையும் எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே இறைவன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!’  (அல்-அஃராப் 7:33) என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேற்கூறப்பட்ட அடிப்படையைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاء

‘மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்’ (அல்-மாயிதா 5:64)

இந்த வசனத்தில் ‘யதானிஎன்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபு மொழியில் யதானி என்பதன் பொருள் ‘இரு கைகள்என்பதாகும்.

எனவே இவ்வசனத்திலிருந்து அல்லாஹ்வுக்கு ‘இருகைகள்’ இருப்பதாகவே விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றமாக ‘கை’ என்பதற்கு ‘சக்தி’ என்று விளக்கம் கொடுப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதாகவே அமையும்.

இரண்டாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பெயர்கள் தொடர்பானது.

(1) அல்லாஹ்வுடைய திருநாமங்கள் அமைத்தும் அழகியவை, அழகின் சிகரத்தில் உள்ளவை, அதில் எந்தக் குறையும் கிடையாது. அவை கூடவே பண்புகளையும் கொண்டிருக்கின்றன.

‘அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன’  (அல்-அஃராப் 7:180)

உதாரணமாக ‘அர்ரஹ்மான்’ (அளவற்ற அருளாளன்) என்ற திருநாமத்தைக் குறிப்பிடலாம். இந்தப் பெயர் கூடவே ‘ அருள் ‘ என்ற பண்பையும் கொண்டிருக்கிறது.

அதேவேளை ‘காலத்தைத் திட்டாதீர்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் காலமாவான்’ (முஸ்லிம் – 2246) என்ற ஹதீஸை வைத்து ‘அத்தஹ்ரு’ (காலம்) என்பது அல்லாஹ்வுடைய திருநாமங்களில் ஒன்று என்று கூற முடியாது. ஏனெனில் இந்தச் சொல் அழகின் உச்சத்தையுடைய ஒரு பொருளை தருவதாக இல்லை. எனவே இந்த ஹதீஸின் கருத்து, ‘காலத்தை இயக்குகிறவன் அல்லாஹ்’ என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

ஹதீஸில் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘எனது கையிலேயே அதிகாரம் இருக்கிறது. நானே இரவையும் பகலையும் மாறிமாறி வரச் செய்கிறேன்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (7491), முஸ்லிம் (2246)

(2) அல்லாஹ்வின் திருநாமங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொண்டவையல்ல.

‘யா அல்லாஹ்! உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய், அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாக்கிம், – சில்ஸிலா ஸஹீஹாவில் ஷேய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிடுகிறார்கள். ஹதீஸ் எண் – 199)

அல்லாஹ் தனது மறைவானவை பற்றிய ஞானத்தில் வைத்திருக்கும் அவனது பெயர்களின் எண்ணிக்கையை அவனைத் தவிர வேறு எவராலும் அறிந்து கொள்ள முடியாது.

‘நிச்சயமாக அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றை யார் சரிவர அறிந்து கொள்கின்றாரோ அவர் சுவனம் நுழைவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: புகாரி (6410), முஸ்லிம் (2677))

இந்த ஹதீஸ் மேற்படி ஹதீஸுடன் எந்த வகையிலும் முரண்பட மாட்டாது. ஏனெனில் இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 தான் என்று வரையறை செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

(3) அல்லாஹ்வின் திருநாமங்கள் அறிவினடிப்படையில் அமைந்தவையல்ல. மாறாக அவை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு தான் அமையும். எனவே அவற்றில் கூட்டல், குறைத்தல் கூடாது. அல்லாஹ் தனக்குத் தாமாக சூட்டிக்கொண்ட, அல்லது நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு இருப்பதாகச் சொன்ன) பெயர்களே தவிர புதிதாக அவனுக்குப் பெயர்களை உருவாக்குவதோ, அல்லது அவன் தனக்கு சூட்டிக் கொண்ட பெயர்களை மறுப்பதோ பெரும் குற்றமாகும்.

(4) அல்லாஹ்வுடைய திருநாமங்கள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் தாத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன் அது கொண்டிருக்கும் பண்பையும் அறிவிக்கிறது.

மூன்றாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பண்புகள் (ஸிபத்துக்கள்) பற்றியது.

(1) அல்லாஹ்வுடைய பண்புகள் அனைத்தும் உயர்ந்தவை, பூரணமானவை, புகழுக்குரியவை. அவை எந்தக் குறைபாடும் கிடையாது.

வாழ்வு, அறிவு, ஆற்றல், கேள்வி, பார்வை, ஞானம், அருள், உயர்வு போன்ற பண்புகளை உதாரணமாகக் கூறலாம்.

‘அல்லாஹ்வுக்கோ உயர்ந்த பண்பு உள்ளது’ என்று அல்லாஹ் கூறுகின்றான். (அந்நஹ்ல்16:60)

அல்லாஹ் பூரணமானவன் எனவே அவனது பண்புகளும் பூரணமாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு பண்பு (ஸிஃபத்) பூரணத்துவம் இல்லாமல் குறைபாடுடையதாக இருந்தால் அது அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத ஸிஃபத்தாகும். மரணம், அறியாமை, இயலாமை, செவிடு, ஊமை போன்ற பண்புகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அல்லாஹ் தன்னைக் குறைபாடுடைய ஸிபத்துக்களால் வர்ணிப்பவர்களைக் கண்டிக்கிறான். அத்துடன் குறைகளிலிருந்து தன்னைப் பரிசுத்தப்படுத்துகிறான்.

‘ரப்பு’ என்ற நிலையில் இருக்கும் அல்லாஹ் குறைபாடுடையவனாக இருப்பது அவனது ருபூபிய்யத்தைக் களங்கப்படுத்தி விடும்.

ஏதாவது ஒரு ‘ஸிஃபத்’ ஒரு பக்கம் பூரணமானதாகவும் இன்னொரு பக்கம் குறைபாடு உள்ளதாகவும் இருந்தால் அந்தப் பண்பு அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்றோ அல்லது இருக்கக் கூடாது என்றோ ஒட்டு மொத்தமாகக் கூறக்கூடாது. மாறாக அதனைத் தெளிவு படுத்த வேண்டும். அதாவது அந்தப் பண்பு பூரணமாக இருக்கும் நிலையில் அது அல்லாஹ்வுக்குரிய பண்பு என்றும் குறைபாடுடையதாக இருக்கும் போது அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத பண்பு என்றும் கூற வேண்டும்.

உதாரணமாக, (المكر) மக்ர் (சூழ்ச்சி செய்தல்) (الخدع) கதஃ (ஏமாற்றுதல்) போன்ற பண்புகளைக் குறிப்பிடலாம்.

‘யாராவது சூழ்ச்சி செய்தால் பதிலுக்கு சூழ்ச்சி செய்தல்’ என்ற நிலையில் வரும்போது அது பூரணத்துவத்தை அடைகிறது. ஏனெனில் சூழ்ச்சி செய்தவனை எதிர் கொள்ள முடியாத அளவு பலவீனன் அல்ல என்ற கருத்திலேயே இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறல்லாமல் சூழ்ச்சி செய்தல் என்பது குறைபாடான ஒரு பண்பாகும்.

முதல் நிலையில் இப்படிப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டிய பண்புகளாகவும் இரண்டாவது நிலையில் இருக்கக் கூடாத பண்புகளாகவும் காணப்படுகின்றன.

இந்தக் கருத்திலே தான் பினவரும் வசனங்கள் அமைந்திருக்கின்றன.

‘அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்’ (அல்-அன்ஃபால்:30)

‘அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன்’ (அத்தாரிக்86:16,17)

‘நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றக் கூடியவன்’ (அந்நிஸா4:142)

அல்லாஹ் சதி செய்யக்கூடியவனா என்று நம்மிடம் வினவப்பட்டால், ஆம் என்றோ அல்லது இல்லையென்றோ பொதுப்படையாகக் கூறக்கூடாது. மாறாக யார் சதிசெய்யப்படத் தகுதியானவர்களோ அவர்களுக்கு சதி செய்யக் கூடியவன்’ என்றே கூற வேண்டும். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

(2) அல்லாஹ்வுடைய பண்புகள் இரண்டு வகைப்படும்.

அ) (الثبوتية) அத்துபூதிய்யா: அதாவது அல்லாஹ் தனக்கு இருப்பதாகக் கூறிய பண்புகள் (உதாரணம்: வாழ்வு, அறிவு, சக்தி) அவை அல்லாஹ்வுக்கு இருக்கின்ற பண்புகள் என்று நம்ப வேண்டும்.

ஆ) (السلبية) அஸ்ஸலபிய்யா: அல்லாஹ் தனக்கு என்று மறுத்த பண்புகள் (உதாரணம்: அநீதி இழைத்தல்)

இப்படிப்பட்ட அவனுக்கு இருக்கக் கூடாத பண்புகளை மறுக்க வேண்டும். அதே நேரம் அதற்கு எதிரான பண்பு பூரணமான முறையில் அவனுக்கு இருக்கிறது என்று நம்ப வேண்டும்.

உதாரணமாக,

‘உமது இரட்சகன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்’ (அல்கஹ்ஃபு18:49) என்ற வசனத்தைக் குறிப்பிடலாம்.

இங்கு ‘அநீதி இழைத்தல்’ என்ற ‘ஸிஃபத்தை’ மறுக்கின்ற அதே நேரம் அவனுக்கு பூரணமாக ‘நீதி வழங்குதல்’ என்ற பண்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

(3) அல்லாஹ்வுக்கு இருக்கக்கூடிய பண்புகள் (الصفات التبوثية) இரண்டு வகைப்படும்.

அ) அவனுடன் எப்போதும் இருந்து கொண்டிருக்கக்கூடிய பண்புகள் (உதாரணம்: கேள்வி, பார்வை) இதற்கு அரபியில் (الذاتية) ‘தாதிய்யா’ என்று சொல்லப்படும்.

ஆ) அவன் நாடினால் செய்யவும், நாடினால் செய்யாமல் இருக்கவும் முடியுமான அவனுடைய செயல்களோடு தொடர்பான பண்புகள் (உதாரணம்: அல்லாஹ் வருவான், இறங்குகிறான்) இதற்கு அரபியில் (الفعلية) ‘fபிஃலிய்யா’ என்று சொல்லப்படும்.

சிலவேளைகளில் ஒரே ‘ஸிஃபத்’ ‘பிஃலிய்யா’வாகவும் ‘தாதிய்யா’வாகவும் இருக்கும். உதாரணம்: (கலாம்) பேசுதல்.

(4) ஒவ்வொரு ஸிபத் பற்றியும் பின்வரும் மூன்று கேள்விகள் எழுகின்றன.
  1. அல்லாஹ்வுடைய ‘ஸிஃபத்து’ யதார்த்தமானதா? அது ஏன்?
  2. அல்லாஹ்வுடைய ‘ஸிஃபத்தை’ விவரிக்க முடியுமா? ஏன்?
  3. அதற்கு படைப்பினங்களின் ‘ஸிஃபத்து’க்களைக் கொண்டு உதாரணம் கூற முடியுமா? ஏன்?
முதலாவது கேள்விக்கான பதில்:

ஆம்! அல்லாஹ்வின் ஸிஃபத்துக்கள் யதார்த்தமானவை. அரபு மொழியில் ஒரு சொல் பயன்படுத்தப்பட்டால் அதனுடைய யதார்த்தமான கருத்தில் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அடிப்படை விதி. அது அல்லாத வேறு அர்த்தத்தில் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு சரியான ஆதாரம் வேண்டும்.

இரண்டாவது கேள்விக்கான பதில்:

அல்லாஹ்வுடைய பண்புகளை விவரிக்க முடியாது. ‘அவனை அவர்கள் முழுமையாக அறிந்து கொள்ள மாட்டார்கள்’ (தாஹா20:110) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவனுடைய ஸிஃபத்துக்கள் பற்றி அறிவால் அறிந்து கொள்ள முடியாது.

மூன்றாவது கேள்விக்கான பதில்:

அவனது பண்புகள் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக மாட்டாது.

‘அவனைப் போல் எதுவும் இல்லை’ (அஷ்ஷுரா26:11) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் மிக உயர்ந்த பண்புகளுக்கு சொந்தக்காரன் என்ற வகையில் அவனைப் படைப்பினங்களுக்கு ஒப்பிட முடியாது.

உதாரணம், விவரனம் இரண்டுக்குமிடையில் உள்ள வித்தியாசம்:

அல்லாஹ்வுடைய கை மனிதனுடைய கையைப் போன்றது என்று கூறுவது உதாரணம் கூறுவதாகும்.

அல்லாஹ்வுடைய கை இப்படிப்பட்டது என்று குறிப்பிட்ட ஒரு அமைப்பை அதற்கு உருவாக்குவது விவரிப்பதாகும்.
இவை இரண்டுமே கிடையாது.

நாலாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பண்புகளை மறுப்போருக்கு மறுப்புச் சொல்லுதல்:

அல்லாஹ்டைய பண்புகளில் அல்லது திருநாமங்களில் எதையாவது மறுப்போர் அல்லது குர்ஆன் ஹதீஸில் வந்துள்ளவற்றைத் திரிவுபடுத்துவோர் (المعطلة) ‘முஅத்திலா’ என்றும் (المؤولة) ‘முஅவ்விலா’ என்றும் அழைக்கப்படுவர்.
இவர்களுக்குப் பொதுவாக நாம் சொல்லும் மறுப்பு:

நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அல்குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமானதாகும். ஸலஃபுகள் சென்ற வழிக்கு முரணானதாகும். மேலும் உங்களுடைய கூற்றுக்கு எந்த பலமான ஆதாரமும் இல்லை என்பதாகும்.


நன்றி: சுவனத்தென்றல்

Monday, November 1, 2010

இறைவனுக்கு உருவம் உண்டா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN8oW8GeupVlBEsh0YLhcKGu5VpLvYI_8VB17dsgn-mhf4NOpxwLCWWtTl5yW7O34Nq08i3vGeZUHMPLtIOQFJ-T5ujJQCT-ChqlgcrA5b-rSj9bjLvtnQlk59wHXxQeI8P3oC9-wNEo4/s1600/Bismillah_2.JPG



  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...

        இறைவனுக்கு உருவம் உண்டா?

அகில உலகங்களையும், அண்ட சராசரங்களையும் படைத்துப் பரிபாலிக்க கூடிய அருளாளன் அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டுமென அல்லாஹ்வும், அவனது அருமைத் தூதர் (ஸல்) அவர்களும் நமக்கு கற்றுத் தந்தார்களோ அவ்வாறு நம்பாத வரை நமது இறை நம்பிக்கை பரிபூரணமடையாது. அந்த வகையில் அகிலத்தின் இரட்சகன் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பதில் நமது சமுதாய மக்களில் ஒரு சாரார் தொடர்ந்தும் தெளிவற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.

இவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய மார்க்க அறிஞர்களோ ‘ஸுன்னாக்களை சில்லறைகள்’ என சிறுபிள்ளைத்தனமாக விமர்சிப்பதற்கும், சத்திய இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் கூட்டல், குறைத்தல் செய்யாது எடுத்துரைப்பவர்களை சமூக ஒற்றுமைக்கு(?) எதிரானவர்களாக சித்தரிப்பதற்கும் மிம்பர் மேடைகளைப் பயன்படுத்தி பாழ்படுத்துகின்றனர்.

எனவே, சத்திய மார்க்கத்தின் தூய மூலாதாரங்களான அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளின் ஒளியில் அருளாளன் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்பது பற்றி நோக்குவோம்.

"அர்ஷின் மீது அவன்(அல்லாஹ்) வீற்றிருக்கிறான்." (திருக்குர்ஆன் 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4) 

"அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
(அல் குர்ஆன் 75 : 22)

வானவர்கள் அணியணியாய் நிற்க உமது இறைவன் வருவான்."(திருக்குர்ஆன் 89:22)

பூமியாகிய அதன் மேலுள்ள யாவும் அழிந்து போகக்கூடியதாகும். கண்ணியமும், சங்கையும் உடைய உமது இரட்சகனின் (சங்கையான) முக(ம் மட்டு)மே (அழியாது) நிலைத்திருக்கும்’ என்று குர்ஆன் (55 : 26, 27) கூறுகிறது. 

(இன்னும் பார்க்க 2:15, 2:272 13:22, 30:38, 39, 76:9, 92:20, 6:52, 18:28, 28:88)

மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாக இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை நாம் அறியலாம்.

இது தவிர, அல்லாஹ்வுக்கு முகம் உண்டு. விரல்களும், கைகளும்  கால்களும் உண்டு.  அல்லாஹ் பார்க்கின்றான், பேசுகின்றான், செவியுருகின்றான்,  சிரிக்கின்றான், கோபிக்கின்றான் போன்ற இறைப்பண்புகளை விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக்கிடைக்கின்றன. அவற்றை எல்லாம் உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளவேண்டுமே தவிர அதற்கு உவமைகள் கூறக்கூடாது. உதாரணங்கள் கூறக்கூடாது. எவருக்கும் நிகரில்லாத எப்பொருளைப் போலும் இல்லாமலும் இருக்கின்றான். அவன் தன்மைகளை உருவகப்படுத்தியோ, கூட்டியோ, குறைத்தோ, மாற்றியோ, மனித கற்பனைக்கு ஏற்ப பொருள் கொள்ளக்கூடாது. மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவனாக ஏக இறைவன் இருக்கிறான்.
 

இதனை விளங்குவதற்குப் படைத்தவன், படைப்பினம் என்ற இரு வார்த்தைகளின் முழு சக்தியையும் புரிந்து கொண்டால் விளங்கிக் கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு.. ஒரு மனித ரோபோவை எடுத்துக் கொள்வோம். அதனை உருவாக்கியவர் அது எப்படி செயல்பட வேண்டும் என அவர் வடிவமைத்தாரோ அதனை விடுத்து அதற்கு உபரியாக அதனால் ஒன்றும் செய்ய இயலாது. 

தெளிவாக கூற வேண்டுமெனில் படைத்தவனை மிஞ்சி படைப்பினத்திற்கு ஒன்றும் செய்ய இயலாது. இந்த உலகமெலாம் கண்காணிக்கும் சக்தியுள்ள இறைவனின் ஞானத்தில் மிகச் சிறிய அளவே மனிதன் பெற்றுள்ளான். நமக்கு தரப்பட்ட இச்சிறிய அறிவினைக் கொண்டு நம்மைப் படைத்தவன் எப்படியிருப்பான் என ஒரு தீர்மானத்திற்கு வருவது இயலாத காரியம். 

ஆக, அல்லாஹுடைய   முகம்,  கைகள்,  கால்கள் எல்லாம் எவ்வாறு இருக்கும் என்று நாமாக கற்பனை செய்து வடிவம்   கொடுப்பதற்கும்,  அல்லாஹ் எவ்வாறு இருப்பான் என்று   சிறு பிள்ளைத்தனமாக அதைப்பற்றி கேள்வி கேட்பதற்கும்  யாருக்கும் அனுமதில்லை. அதைப்பற்றி விளங்க மனிதனுக்கு எந்த அறிவுமில்லை. 

 “உமக்கு எது பற்றி அறிவு இல்லையோ, அதை நீர் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாகச் செவிப் புலன், பார்வை, இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக்கூடியனவாக இருக்கின்றன.” (17:36)

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
(அல் குர்ஆன் 42 : 11.)

‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்’ (அல்குர்ஆன் 06:103)

‘அல்லாஹ் ஒருவன்’ என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:01-04)

  
அல்லாஹுவை யாரும் உலகில் பார்த்தார்களா....?  நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் இரவின் போது இறைவனைப் பார்த்தார்களா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அல்லாஹுவைப் பார்த்ததாகவே இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் நம்பியுள்ளனர். இதன் உண்மை நிலை தொடர்பாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள்.

‘நான் (அன்னை) ஆயிஷா (ரழி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) அபூ ஆயிஷா, ‘மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்’ என்று கூறினார்கள். நான், ‘அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்’ என்று சொன்னார்கள்.


உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, ‘இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அல்லாஹ், ‘அவரை தெளிவான அடிவானத்தில் பார்த்தார்’ (அல்குர்ஆன் 81:23) என்றும், ‘ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்’ (அல்குர்ஆன் 53:13) என்றும் கூறவில்லையா?’ என்று கேட்டேன்.


அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள். இந்த சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அது, (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப் பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக்கொண்டிருந்தது. என்று கூறினார்கள்.


மேலும், ஆயிஷா (ரழி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள். ‘அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 6:103)


அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? ‘எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அழ்ழாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 42:51)


(தொடர்ந்து) ஆயிஷா (ரழி) அவர்கள் மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-287)


‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?’ என்று கேட்டார்கள்.’ (அறிவிப்பவர்: அபூதர்(ரழி), நூல்:ஸஹீஹ் முஸ்லிம்-291)


மேலுள்ள நபிமொழிகள் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை. மாறாக, இவ்வுலகில் பார்க்கவும் முடியாது என்பதை தெளிவுபடுத்துகின்றது.


நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது ‘என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்’ எனக் கூறினார். அதற்கு (இறைவன்) ‘என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்’ என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது, ‘நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்’ எனக் கூறினார். (அல்குர்ஆன் 07:143)

மேலுள்ள அருள்மறை வசனத்தில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களைப் பார்த்து, ‘என்னை நீர் பார்க்கவே முடியாது’ என்று கூறுவதன் மூலம் நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பதை மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் பல மறுமையில், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அவனுடைய நல்லாடியார்களுக்கு அல்லாஹ் காட்சி தருவான் என்று கூறுகிறது.

இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இல்லை’ என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

சுவனத்தில் இறைவனைக் காணும் பாக்கியம்
 

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: சுவனத்தில் சென்றதும் ஓர் அறிவிப்பாளர் கூறுவார்: சுவனவாசிகளே! நிச்சயமாக! அல்லாஹ்விடத்தில் உங்களுக்கென ஒரு வாக்குறுதி உள்ளது. அதனை உங்களுக்கு நிறைவேற்றித் தர அல்லாஹ் விரும்புகிறான் -அதற்கு அவர்கள் சொல்வார்கள்: என்ன அது? அவன் எங்களின் எடைத்தட்டுகளைக் கனப்படுத்தவில்லையா? மேலும் எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? மேலும் அவன் எங்களைச் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து,  நரகத்தை விட்டும் எங்களைத் தூரமாக்கவில்லையா? நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அப்போது அவர்களுக்குத் திரை விலக்கப்படும். இறைவனை அவர்கள் காண்பார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வைப் பார்க்கும் பாக்கியத்தை விடவும் அதிக விருப்பமான அதிகக் கண்குளிர்ச்சியான எதையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருக்கமாட்டான்!, (நூல்: முஸ்லிம்)



எனவே, அருள்மறை வசனங்களும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளும் போதிக்கும் அடிப்படையில் அகிலத்தின் இரட்சகன் அல்லாஹ்வுக்கு தன்னிகரில்லா, தனி உருவம் உண்டு எனவும், அகிலத்தின் இரட்சகனை இவ்வுலகில் ஒருபோதும் பார்க்கவே முடியாது எனவும், மறுமையில் அவனை சுவர்க்கவாசிகள் பார்ப்பார்கள் எனவும், நம்புவதுடன் அல்லாஹ்வின் பண்புகளை, படைப்புக்களின் பண்புகளுக்கு நிகராக்கி வைத்து, நாமாக அல்லாஹுக்கு உருவம் கற்பித்து, வலிந்துரை செய்யாது நம்புதல் வேண்டும்.

இதை விட்டுட்டு விதண்டா வாதம் செய்வதன் மூலம் வழிகேட்டில் செல்வதை தவிர்ப்போமாக!

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.  (2:2)

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.  (2:3)

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.  (2:4)

இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.  (2:5)


யா அல்லாஹ்! உன்னுடைய சுவனங்களில் நிரந்தரமாகத் தங்கி வாழும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக! அங்கு உனது உவப்பை எங்கள் மீது அருள்வாயாக! உன் முகத்தைக் காண்பதன் இன்பத்தையும் உனது சந்திப்பின் ஆர்வத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக! 

எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.  (67:1) 

புகழ் அனைத்தும் வானங்களையும், பூமியையும் படைத்த ஏகனான அல்லாஹ் ஒருவனுக்கே!