Friday, April 9, 2010

இணைவைத்தல் எங்கே எப்போது தோன்றியது?

இணைவைத்தல் எங்கே எப்போது தோன்றியது?
இறைக் கொள்கைக்கு எதிரான நிராகரித்தலும், இணைவைத்தலும் இறைதூதர் நூஹ்-நோவா- (அலை) அவர்களின் சமூகத்தாரிடமே முதலில் தோன்றியது.

இறைமறையில் இறைவன் இதை பின்வருமாறு விவரிக்கிறான்:-
 انا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ
(நபியே! (இறைதூதர்) நூஹுக்கும் அவருக்குப் பிறகு வந்த இறைதூதர்களுக்கும் நாம் வஹீ (இறைத்தூதை) அறிவித்தவாறே உமக்கும் அறிவித்தோம் (அந்நிஸா: 4:163)

நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:-
நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் நபி நூஹ் (அலை) அவர்களுக்கு மிடையே உள்ள காலம் பத்து நூற்றாண்டுகளாகும். இக்கால கட்டங்களில் மக்கள் அனைவரும் இஸ்லாத்திலேயே இருந்து வந்தார்கள்.(ஆதாரம்:தப்ஸீர் இப்னு கதீர்: பாகம் 2: பக்கம்: 412)

ஏன் தோன்றியது ?
இணைவைத்தல் (ஷிர்க்) தோன்றுவதற்கு முதற்காரணமே மனிதன் இறைவனின் படைப்புகளை இறைவனின் தகுதிக்கு உயர்த்தியதும், அவர்களிடையே வாழ்ந்து வந்த நல்லோரை வரையறை மீறிப் புகழ்ந்து வந்ததுமேயாகும்.

இதையும் இறைவனே கூறுகிறான்:-
وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا
மேலும் நூஹ் (அலை) அவர்களின் மக்கள், தமது சமூகத்தாரிடம் உங்களின் (வணக்கத்திற்குரிய) கடவுள்களை விட்டுவிடாதீர்கள்! மேலும் (உங்கள் தெய்வங்களான) வத்து,ஸுவாஉ, யஊது, யகூகு, நஸ்ரு (ஆகிய சிலைகளையும்) விட்டுவிடாதீர்கள் என்றும் கூறினார்கள்; (நூஹ்- 71:23)

இந்தச் சிலைகளை நிறுவியவர்கள் இந்த சிலைகளை அவர்களின் நினைவுச் சின்னங்களாகத்தான் அமைத்தார்கள். ஆயினும் அவர்கள் அவற்றை வணங்கவில்லை.அவர்களின் பின்னர் வந்த அவர்களின் சந்ததியினர் (நினைவுச்சின்னம் என்பதை மறந்து) வணங்கத் தலைப் பட்டனர். (ஆதாரம் புகாரி 4539)

இதனால் தான் ஒருவரை அளவுக்கு மீறிப்புகழ்வதையும், அன்பு காட்டுவதையும் இறைவன் தடுத்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான்:-
يَا أَهْلَ الْكِتَابِ لاَ تَغْلُواْ فِي دِينِكُمْ
வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறிவிடாதீர்கள். (அந்நிஸா 4: 171)

பின்வரும் இருபண்புகளும் உண்மையை மறைக்கவும், பொய்யை கலக்கவும் காரணங்களாக அமைந்தன.

1. நல்லடியார்களை அளவுக்கு அதிகமாகப் புகழந்தது.
நல்லடியார்மீது கொண்ட அளவுக்கதிகமான அன்பினாலும், அவர்களின் உருவங்களை நேரடியாகக் கண்டு கொண்டிருக்க வேண்டுமென்ற விருப்பத்தாலும் அவர்களின் உருவங்களை செதுக்கி வைத்தனர்.

2. நல்லது தீயது என்பதில் மார்க்கத்தின் வழிகாட்டலை விட்டது.
மார்க்க அறிஞர்களும், மதகுருமார்களும் அவர்களின் உருவங்களை வடித்து வைத்திருப்பதால் நன்மை ஏற்படும் எனக்கருதினர். அதுமட்டுமல்ல., இவ்வுருவங்கள் தம் கண் முன்னாலிருந்தால் வணக்கங்களிலும் வழிபாடுகளிலும் பக்தியும் உற்சாகமும் ஏற்படும் எனவும் நம்பினர்.
இதன் விளைவாக அவர்களின் சந்ததியினரிடிருந்த எண்ணங்கள் மாறி அந்தக் கல்லுருவங்களையே கடவுள்களாகக் கருதி வணங்கத் தலைப்பட்டனர்.

விளைவு ?
மார்க்கத்தில் அல்லாஹ்வும், அவன் தூதரும் சொல்லாத ஒன்றின் மூலமாக தங்களின் மார்க்க ஈடுபாட்டை ஏற்படுத்தலாம், பக்தியை உருவாக்கலாம் என எண்ணிக்கொண்டு, இறைவனின் மார்க்கத்தில் அல்லாஹ்வின் தூதர்கள் காட்டாத நெறிகளை தாமாகவே ஏற்படுத்திவிட்டு அது நன்மை பயக்கும் என தவறாக நம்பிக் கொண்டனர்.

நற்செயல் (நல்ல அமல்) என்பதும் அதற்கு நன்மை கிடைக்கும் என நம்புவதும் அல்லாஹ் கூறியதும், அவனது தூதர் சொன்னதும்,செய்ததும், அங்கீகரிததுமாகும். இதை மீறுவது மார்க்கத்தில் அளவு கடந்ததாகவே கருதப்படும்.

நபிகளார் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:
”நமது மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை ஏற்ப்படுத்துபவரின் செயல்கள் நிரகரிக்கப்படும்”.

(அறிவிப்பவர் அன்னை ஆயிஷா(ரலி), ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)
சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறோம், புகழ்கிறோம் எனற பெயரில் புகழ் பாக்கள் -மவ்லிது பாடல்கள், முனாஜாத்துகள் போன்றவற்றை எழுதி,அப்பாடல்களில் அவர்களை வரையறை மீறிப் புகழ்ந்து, ‘தங்களின் நாட்டங்கள் நிறைவேறும், கேட்பவை கிடைக்கும், நோய்நோடிகள் தீரும், செல்வம் பெருகும், இறையருள் பொழியும்  என்ற நப்பாசையில் சடங்குகள், சம்பிரதாயங்களை உருவாக்கி ஓதப்படுகிற இந்த பித்அத்தான, ஷிர்க்கான செயல்கள் மூலம் நன்மைகளை எதிர்பார்க்கின்றனர்.

 ஆனால், இவர்கள் எதிர்பார்க்கும் நன்மைகளுக்குப் பதிலாக தீமைகளும், விபரீதங்களுமே பெருகிவிடுகின்றன.அதனால் அவர்கள் செய்யும் நன்மைகள் யாவும் பயனற்றுப் போகின்றன.

 ஏனெனில், நபிகளாரை புகழ்வதாகக் கருதிக்கொண்டு வரையறை மீறும் போது அவர்களை அறியாமலே ஷிர்க்-இணைவைத்தல் என்னும் மன்னிக்க முடியாத கொடிய பாவத்தின் பால் தள்ளப்படுகின்றனர்.

 இறுதியில், இது நபிகளார்(ஸல்)அவர்கள் அகில உலகிற்கும் போதிக்க வந்த ‘ஏகத்துவக் கொள்கை’ என்னும் மிகப்பெரிய நெறிப்புரட்சிக்கு எதிராக மாறுகிறது. அதுமட்டுமல்ல, யூத, கிறித்தவர்களைப் போல் நபிகளாரை கடவுள் நிலைக்குக் கொண்டு போகும் அபாயகரமான கட்டத்திற்குச் சென்றுவிடுகின்றனர். இவர்களின் செயல்கள் யாவும் வீணாகி இஸ்லாத்திலி ருந்தே வெளியேற்றி, நரகத்திற்கே விறகுகளாகிவிடுகின்றனர். வல்ல நாயன் அல்லாஹ் இக்கொடிய ஷிர்க்கிலிருந்தும் பாவங்களிலிருந்தும் நம்மைக் காப்பானாக!

 மனிதனை மார்க்க நெறிகளிலிருந்தும் தூய இஸ்லாத்தின் புனிதக் கொள்கைகளிலிருந்தும் வெளியேற்றும் அபாயங்கள் ஒவ்வொரு கால கட்டங்களிலும் நிகழும் என்பதை முன்னரே அறிந்த அல்லாஹ்வும், அவனது தூதரும் மக்களை எச்செரிக்கை செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 மர்யம்(அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் மிகைப்படுத்திப் புகழ்ததைப்போல் என்னையும் நீங்கள் புகழ்ந்துவிடாதீர்கள்.நிச்சயமாக நான் ஒரு அடியானே!
 என்னை நீங்கள் அல்லாஹ்வின் அடியான் என்றும், அவனது தூதர் என்றும் கூறுங்கள். (புகாரி: 3189)

 நாயகத் தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:-
 ’நபிகளார்(ஸல்)அவர்கள் தமது ஹஜ்ஜின் போது (மினாவில் எறிவதற்காக) பொடிக்கற்களை கேட்க, நானும் அவ்வாறே எடுத்துக் கொடுத்தேன்.இதைக்கண்ட நபிகளார்’இவ்வாறே பொடிக் கற்களாலேயே எறிய வேண்டும்.(ஆவேசத்தில் பெரும் கற்களை எடுத்து எறிந்து)மார்க்கத்தில் அளவுகடந்து செல்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். இவ்வாறு வரையறை மீறிச்சென்றது தான்  உங்களின் முன் வாழ்ந்த சமுதயத்தினரை அழித்தொழித்தது’என எச்செரித்தார்கள்.
(ஆதாரம் நஸயீ 3007, இப்னு மாஜா 3020. nஷய்கு அல்பானி அவர்கள் இந்த நபி மொழி ‘ஸஹீஹ்’ தரத்தைச் சார்ந்தது என சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

 எனவே ஷிர்க் என்னும் நச்சுக்கருத்துகளைக் கொண்டுள்ள இந்த மவ்லிது பாடல்களைத் தவிர்த்து இம்மை மறுமைப் பேறுகளைப் பெறுவதற்கும் நபிகளாரின் ஷஃபாஅத் கிடைப்பதற்கும் வல்ல நாயன் நமக்கு அருள் பொழிவானாக! ஆமீன்.

0 comments: